Monday, June 08, 2009

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

முல்லை அமுதனின் காற்றுவெளி அமைப்பினால் வெளியிடப்பட்ட 'இலக்கியப் பூக்கள் ' நூலில் வெளியான கட்டுரை. நூலில் வெளியான கட்டுரையின் மூல வடிவம்.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!

- வ.ந.கிரிதரன் -

அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது. அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. அ.ந.கவின் படைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பாடு நூல்களாக வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் தன்னலமற்ற , இலட்சிய வேட்கை மிக்க இலக்கியப்பணிக்கு நாம் செய்யும் கைம்மாறுமாகும். இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல்.

அ.ந.கந்தசாமியின் ஆரம்ப வாழ்க்கை பற்றிய தகவல்கள்...

அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது. [உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துச் சென்றதாகவும், அ.ந.க.வி பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.] இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.

அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார். ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார். அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம்.

மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்குரியம் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் அ.ந.க.. ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் பொழுது 'மறுமலர்ச்சி' என்னும் சஞ்சிகையின் காலகட்டத்தை மட்டும் கருதுவது தவறு. மறுமலர்ச்சி அமைப்பினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அ.ந.கந்தசாமி மறுமலர்ச்சி சஞ்சிகையில் சிறுகதைகள் எழுதாவிட்டாலும் 'மறுமலர்ச்சி' அமைப்பு உருவாவதற்குரிய முக்கிய காரணகர்த்தாக்களிலொருவர்.இந்த வகையில் அ.ந.க.வை மறுமலர்ச்சி எழுத்தாளரென்று கூறுவதில் எந்தவிதத் தவறுமில்லை.

அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன போலும்.

சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்ல. ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.

அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள்....

அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது. இவற்றில் உதவி வந்தது (பாரதி இதழ்) , வழிகாட்டி ( பாரதி இதழ்) , .இரத்த உறவு (பாரதி) , .புதுப் புனல் ( உதயம் மலரில்) , .நாயினும் கடையர் ( வீரகேசரி) , .காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) , .பாதாள மோகினி (சுதந்திரன்) , .நள்ளிரவு (சுதந்திரன்) , .ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) , .பரிசு ( சுதந்திரன்) , குருட்டு வாழ்க்கை .,.உலகப் பிரவேசம் , .ஸ்ரீதனம் , .பிக்பொக்கட் , சாகும் உரிமை , கொலைகாரன் , சாவுமணி போன்றவை பற்றிய தகவல்களையே பெற முடிந்தது. இவற்றிலும் ஒரு சிலவற்றையே பெற முடிந்தது. ஏனையவை ஆங்காங்கே பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் எத்தனை காலத்தால் அழியுண்டு போயினவோ நாமறியோம். இந்நிலையில் இயலுமானவரையில் அவை சேகரிக்கப்பட வேண்டும். ஆவணப் படுத்தப்பட வேண்டும்.

இவரது சிறுகதைகள் பற்றித் தனது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அண்மையில் மறைந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் 'இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 'இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.... அத்துடன் 'வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்' என்று கூறுவது கவனிக்கத் தக்கது.

அ.ந.கந்தசாமியின் கவிதைகள்..

கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை.அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்டார்.

'சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். 'எதிர்காலச் சித்தன் பாட்டு', துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் என்பன சிறந்தவை' என்பார் எழுத்தாளர் செம்பியன் செல்வன். இவரது ஆரம்பக் கவிதைகளிலொன்றான 'சிந்தனையும், மின்னொளியும்' நல்லதொரு கவிதை. 'ஈழத்துச் சாகித்திய அமைப்பின் இலக்கிய நிகழ்வொன்றில் பாடப்பட்ட இவரது ‘கடவுள் - என்சோரநாயகன்' என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்று கூறியதாக அநதனி ஜீவா, செம்பியன் செல்வன் போன்ற பல எழுத்தாளர்கள் தமது கட்டுரைகளில், ஆய்வு நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். எழுத்தாளர் காவலூர் ராஜதுரையும் அ.ந.க.பற்றியத் தினகரனில் எழுதிய கட்டுரையில் "சாகித்திய மண்டலத்தின் 'பா ஓதல்' கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. 'கடவுள் என் சோர நாயகன்' என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. 'நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?' என்றார் கந்தசாமி" என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் அ.ந.க ஈழத்துக் கவிதையுலகில் தவிர்க்கப்படாத முக்கிய படைப்பாளியென்பதை உறுதி செய்யும்.

அ.ந.க.வின் நாவல், நாடக முயற்சிகள்....

அ.ந.க.வின் ஒரேயொரு நாவல் 'மனக்கண்' தினகரனில் 1967இல் தொடராக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. இதன காரணமாகவே பின்னர் அ.ந.க.வின் உற்ற நண்பர்களிலொருவரான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தினரால் ஒலிபரப்பப் பட்டது. பதிவுகள் இணைய இதழிலும் இந்நாவல் அண்மையில் தொடராக வெளிவந்திருந்தது. (ஆயினும் இந்நாவலிம் அத்தியாயம் முப்பதினை கண்டெடுக்க முடியவில்லை. இந்த அத்தியாயமிலாமலே பதிவுகள் இணைய இதழில் மேற்படி நாவல் வெளிவந்தது..) இந்த நாவல் முடிந்தபொழுது அ.ந.க. தனது முடிவுரையினை 'நாவல்' பற்றியதொரு நல்லதொரு ஆய்வுக்கட்டுரையாக வடித்துள்ளார். அதிலவர் மனக்கண் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தவிர அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்ததாகவும், அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அ.ந.க. தாஜ்மகால் பற்றிய 'கடைசி ஆசை' , 'அமர வாழ்வு' போன்ற குறுநாடகங்கள் சில எழுதியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் 1967இல் கொழும்பில் நான்கு தடவைகள் மேடையேற்றப்படுப் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஈழத்து இலக்கிய உலகில் எழுப்பிய 'மதமாற்றம்' என்னும் நாடகம் அவரது காத்திரமான பங்களிப்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கும். இந்நாடகம் கலாநிதி கைலாசபதி அவர்களை மிகவும் கவர்ந்த நாடகங்களிலொன்று. அது பற்றி அவர் 'இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது இதனைப் புலப்படுத்தும். இது பற்றி அ.ந.கந்தசாமியே விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளிவந்த 'ராதா' என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அந்தனி ஜீவா தினகரனில் அ.ந.க. பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்; என்னும் தொடரில் 'எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள்' என்று குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல. மேற்படி அ.ந.க.வின் நாடகத்தைப் பற்றிய தனது 'டெய்லி மிரர்' விமர்சனத்தில் அ.ந.க.வின் நாடகத் திறமையினை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவோடு ஒப்பிட்டு விமர்சித்திருப்பது அ.ந.க.வின் நாடகப் புலமையினை வெளிப்படுத்தும்.

அ.ந.கவும் உளவியலும்...

"வெற்றியின் இரகசியங்கள்" என்ற அ.ந.கந்தசாமியின் உளவியல் நூலினைப் பாரி பதிப்பகத்தினர் தமிழகத்தில் வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் பல்வேறு உளவியற் கோடுபாடுகள் பற்றியெல்லாம், அவற்றை வாழ்வின் வெற்றிக்கு எவ்வகையில் பாவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தனக்கேயுரிய துள்ளுதமிழ் நடையில் அ.ந.க. விபரித்திருப்பார்.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்.....

1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நானா' (நாவல்'- , பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். இவையெல்லாம் சேகரிக்கப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் படைப்பாளிகள் இவை பற்றிய தகவல்களை எமக்கு அறியத் தந்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம்.

எமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா 'நானா' பற்றி சுதந்திரனுக்கு எழுதிய வாசகர் கடிதமொன்றில் '"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' என்று தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கையிலிருந்தும் மட்டுமல்ல தமிழக்த்திலிருந்தும் பலர் 'நானா' பற்றிய தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகிப் பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

அ.ந.க. என்றொரு விமர்சகர்....

சிறுகதை, கவிதைகள், நாடகம், நாவலெ, மொழிபெயர்ப்பு என்றெல்லாம் எழுத்தில் கால் பதித்த அ.ந.க. பல்வேறு அரிய இலக்கியக் கட்டுரைகளை, விமர்சனக் கட்டுரைகளை, நூல் மதிப்புரைகள் மற்றும் சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரைகள்,தேசிய இலக்கியம், கவிதை, நாடகத் தமிழ், சிலப்பதிகாரம்' என்றெல்லாம் பல்வேறு விடயங்கள் பற்றி அ.ந.க. எழுதிய படைப்புகள் பல்வேறு சிற்றிதழ்கள், பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்திருக்கின்றன. வெண்பா பற்றிய தொடர் கட்டுரைகளை வீரகேசரியில் எழுதியுள்ளதாகவும் அறிகின்றோ. இதனால் அ.ந.க.வை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர்களிலொருவராகவும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் இவர் சுதந்திரனில் எழுதிய சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தமிழகத்திலும், இலங்கையிலும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பின. பெரியாரின் குடியரசு பத்திரிகையிலும் இவற்றில் சில மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை பெற்ற அ.ந.க. ஆங்கிலத்திலும் சிலப்பதிகாரம், திருக்குறள், கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றியெல்லாம் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை டிரிபியூன் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அ.ந.க.வும் சிறுவர் இலக்கியமும்!

சிறுவர் இலக்கியத் துறையில் அ.ந.க தன் பால்ய காலத்தில் ஈழகேசரி மாணவர் மலரில் எழுதியுள்ளதாக அறிகின்றோம். இவையும் சேகரிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றோம். இது தவிர 'சங்கீதப் பிசாசு' என்றொரு சிறுவர் நாவலொன்றினையும் அ.ந.க எழுதியுள்ளார். எழுபதுகளின் இறுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையில் அந்நாவலின் சில அத்தியாயங்கள் வெளிவந்த்துள்ளன. பின்னர் 'கண்மணி' நின்று விடவே அந்நாவலும் குறையுடன் நின்று விட்டது. அந்நாவல் முதன் முதலில் 'சிரித்திரனில்' வெளிவந்ததாகச் சிரித்திரன் ஆசிரியர் அவருடனான உரையாடலொன்றின்போது குறிப்பிட்டதாகவொரு நினைவு. இது பற்றிய தேடலினையும் தொடங்க வேண்டும்.

அ.ந.க.வின் உரைநடை...

அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. அவருக்குப் பெருமை சேர்க்குமின்னுமொரு விடயம் அவரது அந்தத் துள்ளுதமிழ் உரைநடை. இது பற்றிய செம்பியன் செல்வனின் 'ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்' "இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம்." என்று குறிப்பிடும்.

வானொலியில் அ.ந.க....

இலங்கை வானொலியின் "கலைக்கோல" நிகழ்ச்சியிலும் மாதந்தோறும் அ.ந.க. வின் விமரிசினங்கள், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அவரது இறுதிப் படைப்பாக 'மொழிபெயர்ப்பு நாடக'மொன்று ஒலி பரப்பப்பட்டதாகவும் அறிகின்றோம். அ.ந.க.வின் வானொலி முயற்சிகளைப் பற்றி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இவர் பற்றிய தேடலினைத் தொடர வேண்டிய தேவையினை இது வலியுறுத்தும்.

இவை தவிர பேச்சுக் கலையிலும் வல்லவர் அ.ந.க. அத்துடன் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றிய அன்றைய காலத்து இலக்கிய வானில் நட்சத்திரமாக மின்னியவர் அ.ந.க என்பதைத்தான் அவர் பற்றிய கட்டுரைகள், நூல்கள் தெரிவிக்கின்றன.

செயல் வீரர் அ.ந.க!

அ.ந.க. எழுதியதுடன் மட்டும நின்று விட்டவரல்லர். செயல் வீரரும் கூட. தான் கொண்ட கொள்கைகளுக்காக இறுதி இறுதி வரையில் போராடியவர். 'வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர்' என்று தனது ''ஈழத்துச் சிறுகதை மணிகள்' நூலில் குறிப்பிடுவார் எழுத்தாளர் செம்பியன் செல்வன. இது பற்றிய அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திரன் நாயகன்' ''வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்." என்று பதிவு செய்யும்.

மேற்படி கட்டுரையில் அந்தனி ஜீவா அ.ந.க.வின் மார்க்சிய ஈடுபாடு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார். கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.".

அ.ந.க.வின் இலக்கியக் கோட்பாடுகள்!

"'மக்கள் இலக்கியம்' என்ற கருத்தும் 'சோஷலிஸ்ட் யதார்த்தம்' என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன" எனத் தனது பிரசித்தி பெற்ற 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடும் அ.ந.க. பின்வருமாறு தான் எழுதுவதன் நோக்கம் பற்றி விபரிப்பார்:

"எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கபலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்."

'தேசாபிமானி'யில் வெளிவந்த மேற்படி கட்டுரை எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அ.ந.க மறைந்தபொழுது அவரது மேற்படி கட்டுரையினைப் பிரசுரித்த தேசாபிமானி 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்றொரு ஆசிரியத் தலையங்கத்தினையும் வரைந்து தனது அஞ்சலியினைச் செலுத்தியது.

இவையெல்லாம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் அளப்பரிய பங்களிப்பினைத் தெளிவாக விளக்கி நிற்கின்றன. இன்று அ.ந.க பற்றிக் குறிப்பிடும் ஒரு சில எழுத்தாளர்கள் அவரது பன்முக ஆற்றலின் பின்னணியில் அவரை ஆய்வு செய்ய மறந்து சில சமயங்களில் மேலோட்டமாகக் கருத்துகளைத் தெரிவிப்பது அவர்களது அறியாமையின் விளைவே. அ.ந.க. போதிய ஆய்வுகளின்றி அவர் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. "ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார். நவீன தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச் சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்" என்று குறிப்பிடும் செம்பியன் செல்வன் "இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல் துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையா"வென்று குறிப்பிடுவதை மேற்படி அரைகுறை ஆய்வாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய தனது வேதனையினை "அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்" என்றும் வெளிப்படுத்துவார்.

அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த 'தமிழமுது' என்னுமோர் சிற்றிதழின் ஆசிரியரான சரவணையூர் மணிசேகரன் தனது 'அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் ஆசிரியத் தலையங்கத்தில் "அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்.... ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது." என்று சாடியிருப்பார்.

இவ்விதம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல்துறைகளில் அரிய பங்காற்றிய அறிஞர் அ.ந.க.வின் படைப்புகளை இனியாவது இன்றைய தமிழ் உலகு வெளிக்கொணர முயற்சிகள் செய்ய வேண்டும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவரது படைப்புகளைச் சேகரிக்க உதவினாலே அதுவேயொரு மிகப்பெரிய சேவையாகவிருக்கும்.


ngiri2704@rogers.com

Sunday, June 07, 2009

கவீந்திரன் கண்ட கனவு!

கவீந்திரன் கண்ட கனவு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன்-

-ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் த்மிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது [மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த் வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் ம்றுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முத்லாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. - பதிவுகள்]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த அளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....' (ஈழகேசரி)

இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'

மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்த்வர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப் புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:

'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'

மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:

'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்
பீடைதனைக் கண்டனன் கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.

புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)


'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.

அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.

'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­வ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'

என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.

அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் ­னியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'

மேற்படி கவிதையினைத் நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட் இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றன.

அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது. இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்
அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.

அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'

இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'

என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:

'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'


இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்' என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி 'ஒப்பரிய
காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்' எனவும்

'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்' எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:

'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச்
சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'

ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு
கூறுவார்:

'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'

இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்.

அ.ந.கந்தசாமியின் கவிதைகள் சில!

சிந்தனையும் மின்னொளியும்!

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-


எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமி·து மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் கானப் பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணீக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிள ந் தெறிந்திருப்போம் என்றுனிகழ்த்திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை எனென்ன்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் கான்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?

வள்ளூவர் நினைவு!

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவிய மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார்.

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அ·தொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீ£ர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.

-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-

நான் செய் நித்திலம்!

வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல்
வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான்
இப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்;
கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக்
கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை
வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென்
மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி
ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள்
நீங்கள் செய்த நித்திலம் இதுவே.
என்று கூறி மகிந்தனள்; அவள் கண்
ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று
அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி
தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில்
உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி
வந்தஅம் முத்தில் வையகத் தின்பம்
யாவும் கண்டனன்; அம்முத்தெனது
மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட
மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி
உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன்.
நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!

வில்லூன்றி மயானம்!

நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வ·து.

மக்கள்குல மன்றோநாம் மரமோ கீ¢ழாம்
மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத்
தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு
மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி
மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத்
திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச்
சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.

கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது.
கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ?
பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள்
பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார்
வாழியரோ வரப்போகும் நவயு கத்தின்
வளக்காலை இளம்பருதி வரவு ணர்த்தும்
கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல்
கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம்.

பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று
பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின்
பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான
பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச்
சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச்
சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின்
சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்.

அன்னையார் பிரிவு!

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப்
பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச்
சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ்
சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று
நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை
தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம்
பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து
பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்!

மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற
காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த
பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின்
பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின்
சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க
கஸ்த்தூரி யன்னாய்! எம் கருத்தே! கண்ணே!
பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இ·தோ
பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?

சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல்
மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய்
உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

நகரம்!

நகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்
பகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்
சகலர்க்கும் ஏதோ இந்த 'சட்டுப்புட்' அவசரந்தான்
அகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே!

அப்பப்பா! மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ!
தொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்
சப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று
எப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு?

பெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ? சில்லோர்
கண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்
வண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்
பொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.

ட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்
ட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல
தாமரை முகமொன்றந்த ட்\ராமிலே தளிர்க்க அ·தை
காமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்

ரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்
ஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்
உட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.
கட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே! கூச்சல்தானே!

நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!

காற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்
நூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்
நாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி
தூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்!

சிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார மென்னே!
கற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்
புற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்
கற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்!

செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!

- சுதந்திரன் மார்ச் 18, 1951

அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!

1.
சட்ட மென்னும் கருங்கல்லால்
சமைத்த சிறைவீ டிதுவாகும்
சட்டம் சரியோ பிழையோ நான்
சாற்றவறியேன் அறிவதெலாம்
கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு
கருங்கற் சுவரும் பலமாகும்
மற்றதெல்லாம் எற்றுக்கு
மனதே வீணில் அலைவதுமேன்?

2.
சிறைவீ டென்று கூறிவிட்டால்
சிறியோர் தாமோ அங்கிருப்போர்?
நிறைந்த அறிவின் அலைவீசும்
நீலக் கடலே அனையாரும்
திறந்தே இருளைப் பிளந்தொளியை
திக்கிற் சிதற் விட்டோரும்
மறைந்தே உறைந்த ஆலயமாம்
வணங்கற்குரிய கோவிலிதாம்!

3.
கிரேக்க ஞானி சோக்ரரும்
கீழைத்தேச மகாத்மாவும்
உரைக்க வொண்ணா நற் பெருமை
உத்தமரின்னும் பல நூறாய்த்
தரைக்கே உண்மை வழிகாட்ட
தாரணி தோன்றிய நன் மலர்கள்
சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற
சிறுமை உலகம் இதுவன்றோ?

4.
பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்
பேதை நானும் இடம் பெற்றேன்!
அரிதே இந்த அதிர்ஷ்டத்தை
அறிந்த நண்பர் யாவர்க்கும்
விரிவாய் உரைத்து மகிழ்தற்கு
விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!
சரிந்தே உந்தன் சுவரெல்லாம்
சாய்ந்தே ஒழிந்து போகாவோ?

5.
வானின் சிறிய மலர்கள் போல்
வாவும் வண்ணப் பறவைகளை
கான வேடன் கைப்பற்றி
கட்டிக் கூட்டில் இட்டதுபோல்
மானிடப் புள்ளின் சிறகதனை
மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்
நானிலப் புல்லர் கூட்டம்போல்
நாசகாரர் இங்குண்டோ?

6.
பறவை நல்லூன் உணவாகும்
பயனைக் கருதி அடைக்கின்றார்!
கறவைப் பசுவைப் பாலுக்காய்க்
கட்டிவைத்துக் கறக்கின்றார்!
வறிதே மனிதர் கூட்டத்தைச்
சிறையில் வைத்து வளர்க்கின்றார்!
சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்
சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!

7.
களவு செய்தால் சிறையென்று
கனன்றே என்னை இங்கிட்டார்!
களவு களவு என்ப தெல்லாம்
கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே
முழுதும் பெரிய விளையாட்டே
மூடத்தனத்தின் முடிபேயாம்!
களவு களவு என்ற பதக்
கருத்தை நானும் கழறுவனே!

8.
உள்ளவனிடத்தில் இல்லாதான்
உணவின் உடையின் தேவைக்காய்
மெல்லச் சிறிதே எடுத்திட்டால்
மேதினி அதனைக் களவென்னும்!
உள்ளவனிடத்தில் அல்லாமல்
உடைமை யற்றவன் கையிருந்து
இல்லா மனிதன் எடுப்பதற்கு
எங்ஙன் முடியும் இயல்பு வீரே!

9.
இன்னும் கூறுவன் கேளுமினோ!
இல்லாமனிதன் உள்ளவனைப்
பன்னிப் பன்னிக் கேட்டாலும்
பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!
சென்னியில் அடித்துப் பறித்தாலோ
சிவந்த ரத்தம் வீணாகும்!
அண்ணல் காந்தி சொல்லிவைத்த
அகிம்சை வழியே களவாகும்!

10.
கள்வர் கள்வர் எனக்கூறி
கருணையற்றோர் ஏழைகளை
மெள்ள இங்கே தள்ளுகிறார்
மேலாம் செல்வர் பகலினிலே
கொள்ளை அடிப்போர் உலகெங்கும்
குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!
கள்வர் தமக்கே சிறையென்றால்
அவர்க்கே முதலிடம் தருவீரே!

11.
களவு பிடிக்கும் சட்டமெல்லாம்
காசினி வதியும் செல்வர்களே
அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு
ஆக்கி வைத்த தந்திரமாம்!
வளமார் கிளிகள், பறவையினம்
வனத்தில் வதியும் விலங்குகளில்
களவுச் சட்டம் ஒன்றுண்டோ?
கழறும் கவிதை ரசிகர்களே!

12.
சிறையில் உடலைப் பிணித்தாலும்
சிந்தனை சிறகு தீயவில்லை!
முறையாய் நினைவு முழுவதுமே
முழங்கித் தீர்க்கத் தருணமிலை!
சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,
இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்
சிறையே! என்னுளம் கவிதையினால்
சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!

13.
இரும்புக் கம்பிகள் பின்னால் நான்
இருந்து குமையும் வேளைகளில்
இரும்புக் கம்பிகள் எத்தனை யென்
றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!
திரும்பத் திரும்ப எண்ணிடிலும்
திடமாம் கம்பிகள் பதினெட்டே!
திரும்பத திரும்ப எண்ணுவதேன்
திடுமெனக் கூடிக் குறையுமென்றா?

14.
கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்
கருமைந் நிழல் படர்ந்துள்ள
நெருங்கும் சந்துகள், மூலைகளில்
நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!
கருங்கற் சுவரின் இடையினிலே
காணும் சிறையே! இவ்வுலகின்
கருங்கல் லிதயத் துறைகின்ற
காரிருள் சின்னம் நீயேதான்!

நன்றி: சுதந்திரன் ஆகஸ்ட் 5, 1951.

***************

அ.ந.க. பற்றி மேலும் சில இணைய இணைப்புகள்:

1.அறிஞர் அ.ந.கந்தசாமியின் 15 கவிதைகள்! http://www.geotamil.com/pathivukal/poems_15_ANK.htm
2.கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின் ) கவிதைகள் சில ..http://www.geotamil.com/pathivukal/poems_september2008.htm#ANK
3.அறிஞர் அ.ந.கந்தசாமி http://www.geotamil.com/pathivukal/poems_ank.html
4.அ.ந.க.ந்தசாமியின் படைப்புகள் சில: http://www.geotamil.com/pathivukal/ank_unicode_november2006.htm
5.அறிஞர் அ.ந.கந்தசாமி! பன்முக ஆளுமையுள்ள ஈழத்திலக்கிய முன்னோடி!
சிறு அறிமுகம்! http://www.geotamil.com/pathivukal/ANKANTHASAMI.html
6.அ.ந.கந்தசாமியின் வலைப்பதிவு: http://ankanthasamy.blogspot.com/
7. சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் - அந்தனி ஜீவா.http://www.geotamil.com/pathivukal/ankbyanthonyjeevaa.html
...
ngiri2704@rogers.com

இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்


இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன்
['வடக்குவாசல்' இலக்கிய மலருக்காக எழுதியது- ஆசிரியர்]

பொதுவாக மானுட குலத்தின் வளர்ச்சியென்பது தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவொன்று. மானுட சமுதாயத்தில் இதுவரையில் நிலவி வந்த, நிலவி வரும் சமுதாய அமைப்புகளின் பரிணாம வளர்ச்சிக்குக் காரணமே தொழில் நுட்ப வளர்ச்சியானது உற்பத்தி முறையில் ஏற்படுத்திய மாற்றங்களின் வளர்ச்சியே. மானுட வரலாற்றின் பலவேறு காலகட்டங்களில் அவ்வப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களெல்லாம் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் வரவானது தகவற் பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது. அதே சமயம் அரசியல், இலக்கியம், கல்வி, ஆய்வு, பிரயாணம், விஞ்ஞானமெனப் பலவேறு துறைகளிலும் மேற்படி உபகரணங்களின் வரவானது தாக்கங்கள் பலவற்றை ஏற்படுத்தின. எந்தவொரு தொழிநுட்பத்தின் தன்மைக்கேற்பவும் மேற்படி வெகுசன ஊடகத்துறையிலுருவான மாற்றங்களும் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற விளைவுகளை உருவாக்கின. தகவல் பரிமாற்றத்தில் மேற்படி தொழில் நுட்பங்களின் மாற்றங்களை இன்னும் நவீனமயப்படுத்தச் செய்மதிகளின் வரவு உதவியதெனலாம். செய்மதிகளின் மூலம் இதுவரை காலமும் நாடுகளின் எல்லைகளுக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த பல விடயங்களை, தகவல்களை விரைவாகவே உலகெங்கும் எடுத்துக் கொண்டு செல்வதற்கு வழிவகைகளேற்பட்டன. மேற்படி வெகுசன ஊடகங்களின் தொழிநுட்ப வளர்ச்சியானது இப்பூவுலகின் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு வரும் காலகட்டத்தில் இணையத்தின் வரவானது தகவல் தொழில் நுட்படமுட்பட மானுடத்தின் பலவேறு துறைகளிலும், பிரிவுகளிலும் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதோடு , உலகினை எல்லைகளற்றுச் சுருக்கி விட்டது. பலவேறு மட்டத்திலிருக்கும் மானிடர் (அறிந்தவர், அறியாதவர், படித்தவர், படிக்காதவர், வறியவர், செல்வர், நடிகர், அரசியல்வாதி, வர்த்தகர், மாணவர், ஆண், பெண், முதியோர், சிறுவர், சிறுமியர், வியாபாரியென பலவேறு பிரிவினரும்) தமக்கேற்ற வகையில் இணையத்தைப் பாவிக்கும் நிலையேற்பட்டது. தகவற் பரிமாற்றங்கள் விரைவாக நடைபெற இணையம் உதவுகிறது. இதுவரை காலமும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களெல்லாம் அவற்றின் அறிமுகக் காலகட்டங்களில் உருவாக்கிய, அறிமுகப்படுத்திய மாற்றங்களெல்லாவற்றையும் விட மிகப்பெரிய பாய்ச்சலையே இணையத்தின் வரவு ஏற்படுத்தியது. வாசிப்பிலும், எழுதுவதிலும் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு இணையத்தின் வரவும் அதனுடனான எனது உறவும் பல புதிய வழிகளை, சந்தர்ப்பங்களைக் காட்டின; உருவாக்கித் தந்தன. மானுடரின் இலக்கிய முயற்சிகளுக்கு இணையத்தின் வரவு உருவாக்கித் தந்த அளப்பரும் வளங்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக பதிப்புத் துறையில் அதன் வளங்கள் மலைப்பைத் தந்தன. மிகவும் இலகுவாக உலகின் பலவேறு பகுதிகளிலும் பரந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதுடன்,அவர்களுடன் என் இலக்கிய முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளுமிருப்பதை உணர்ந்தேன். அத்துடன் கருத்துகளை விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வழிகளை இணையமேற்படுத்தித் தந்தது. கணித்தமிழானது தமிழ் மொழியின் வளர்ச்சியின் முக்கியமானதொரு மைல்கல் என்பதை உணர முடிந்தது.

'பதிவுகளின்' தோற்றமும், நோக்கமும்.....

இத்தகையதொரு சூழலில்தான் தகவற் தொழில்நுட்பத் துறையில் மிகப்பிரபலமான நிறுவனங்களுடன் இனைந்து பணியாற்றும்
சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இணையததளப் பராமரிப்புத் துறையில் பணியாற்றிய அனுபவம் மேலும் அதன் ஆரோக்கியமான பயன்களை உணர வைத்தது. அவ்விதமானதொரு சமயத்தில்தான் 'பதிவுகள்' இணைய இதழினை மிக எளிமையாக 2000ம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பித்தேன். முரசு அஞ்சலின் உதவுயுடன் தட்டச்சு செய்வதும் இலகுவானதாதவிருந்தது. பதிவுகள் போன்ற இதழ்கள் பல ஆரம்பத்தில் உருவானதற்கு முரசு அஞ்சலின் வரவு மிகுந்த பங்களிப்பினை அளித்ததை அனைவரும் அறிவர். இதற்காக முத்து நெடுமாறனுக்கு நன்றி கூறவேண்டும்.

பதிவுகள் இணைய இதழ் உருவானதன் முக்கியமான நோக்கங்கள் பற்றி பதிவுகள் சஞ்சிகையிலேயே அவ்வப்போது கூறியிருக்கின்றோம். அவற்றை மீண்டுமொரு முறை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானதே. 'பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( 'Sharing knwoledge with every one'). ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' தளத்தின் தாரகமந்திரமாக 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொளவோம்' என்னும் சொற்றொடரினை உருவாக்கிக் கொண்டேன். ஒவ்வொரு முறை பதிவுகள் இதழினைப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் மேற்படி சொற்றொடர் நெஞ்சில் உற்சாகத்தினையும், களிப்பினையுமேற்றி அவ்வப்போது ஏற்படும் சலிப்புணர்வுகளையெல்லாம் ஒதுக்கிவிடுவதில் பெரிதும் ஒத்துழைத்தது. தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளுக்குக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின்
பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் இவ்விதமாக ஆரம்பத்தில் எளிமையாக வெளிவந்து கொண்டிருந்த பதிவுகள் பலரது கவனத்தையும் கவர ஆரம்பித்தது. பலவேறு சஞ்சிகைகளில் பதிவுகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் வெளியாகின. தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த மகாத்மா காந்தியின் பேரன் தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைப் போரினைப் பயங்கரவாதச் செயற்பாடாகச் சித்திரித்த குடியரசுக் கட்சிக்குச் சார்பாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்காக தேர்தலில் செயற்படுவதைப் பற்றிய பதிவுகளின் குறிப்பினை ஆனந்தவிகடன் மீள்பிரசுரம் செய்திருந்தது. இவ்விதமாகப் பதிவுகளுடன் பல்வேறு படைப்பாளிகளுட்படப் பலர் வந்து இணைந்து பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். அடுத்துவந்த ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள். கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்'

பதிவுகளும், பல்வேறு எழுத்துக் குறிமுறை நியமங்களும்!

ஆரம்பத்தில் முரசு அஞ்சலில் இணைமதி எழுத்துருவுடன் ஆரம்பிக்கப் பட்ட பதிவுகள் இணைய இதழ் பின்னர் 'திஸ்கி' (TSCII - Tamil Standard Code for Information Interchange) எனப்படும் தகுதரம் (தமிழ் குறியீட்டு தராதரம்) என்னும் எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாற்றப்பட்டது. 'அஸ்கி' (ASCII - - American Standard Code for Information Interchange) எனப்படும் 'எட்டு பிட்' அடிப்படையிலமைந்த மேற்படி எழுத்துக் குறிமுறை நியமமானது தமிழில் உலகளாவியரீதியில் இணையத்தில் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமம். மேற்படி நியமமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கணினியில் ஆவணமொன்றைத் தயாரிப்பதை இலகுவாக்கியது. இக்குறிமுறை நியமத்தில் 'அஸ்கி' குறிமுறை நியமத்தில் ஆங்கில எழுத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தமிழ் எழுத்துகளுக்குரிய இடம் ஒதுக்கப்பட்டன. முன்னர் ஆங்கில எழுத்துகளுள்ள இடங்களிலேயே தமிழ் எழுத்துகளும் அதனை உருவாக்கியவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பிரதியீடு செய்யப்பட்டதால் அத்தகைய செயற்பாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளைக் கையாள்வதில் சிரமங்களையேற்படுத்தினை. தரப்படுத்தப்படாத எழுத்துக் குறிமுறை நியமத்தில் உருவாக்க்கப்பட்ட பல்வேறு தமிழ் எழுத்துகளில் உருவான கோப்புகளை வாசிப்பதற்கு அந்தந்த எழுத்துருக்களைப் பாவிக்க வேண்டிய தேவையுமிருந்தது. இந்நிலையினை தகுதர எழுத்துக் குறிமுறை நியமம் இலகுவாக்கியது. மேற்படி தகுதர எழுத்துக் குறியீட்டு முறையில் உருவான ஏதாவதொரு எழுத்துரு மூலம் உருவான கணினி ஆவணங்களை இன்னுமொரு தகுதர எழுத்துருவுள்ள கணினியிலும் வாசிப்பதை இவ்வகையான எழுத்துக் குறிமுறை நியமம் சாத்தியமாக்கியது. மேற்படி எழுத்துக் குறியீட்டு முறையினைப் பாவித்துத் தமிழைக் கணினியில் உள்ளிடுவதற்கு 'எ-கலைப்பை', முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்கள் மிகவும் உதவின. மேற்படி தகுதர எழுத்துக் குறிமுறை நியமத்தில் பதிவுகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான படைப்பாளிகள் பலர் பதிவுகளுக்கு ஆக்கப் பங்களிப்புச் செய்தார்கள். பதிவுகளின் விவாதக் களத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள். இன்றுபோல் வலைப்பூக்கள் அறிமுகப்படாத அக்காலகட்டத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் போன்ற இதழ்கள் நடாத்திய விவாதத்தளங்கள் நடைபெற்ற விவாதங்கள் குறிப்பிடத்தக்கன. இன்று பதிவுகள் 'பதினாறு பிட்' எழுத்துருவான ஒருங்குறி (Unicode) எழுத்துக் குறிமுறை நியமத்திற்கு மாறிவிட்டது. ஆயினும் பதிவுகளின் பழைய படைப்புகள் இன்னும் முரசு அஞ்சலின் இணைமதி மற்றும் தகுதர எழுத்துருக்களில் இருக்கின்றன. அவற்றை வாசிப்பதற்கு அவற்றிற்குரிய மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இன்று ஒருங்குறியில் வெளிவரும் பதிவுகள் இதழினை ஒருங்குறி எழுத்துக் குறியீட்டு முறை நியமத்தினை உள்ளடக்கியுள்ள 'விண்டோஸ் XP' போன்ற இன்றைய 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' மூலம் வாசிப்பதில் வாசகர்கள் எந்தவிதச் சிரமங்களையும் எதிர்நோக்கத் தேவையில்லை. மேலும் முன்னர் குறிப்பிட்ட முரசு அஞ்சல், எகலப்பை போன்ற மென்பொருட்கள் ஒருங்குறியில் தமிழைக் கணினியில் உள்ளீரு செய்வதற்கு உதவியாகவிருக்கின்றன. ஆங்கில மொழியைப் போல் ஒருங்குறி எழுத்துக் குறிமுறை நியமத்தில் உலகின் மொழிகளனைத்துக்கும் உரிய இடங்கள் உள்ளன. இதனால் ஒருங்குறியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எந்த 'ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' என்றாலும் , அது எந்த மொழ்யில் இருந்தாலும் , தமிழ் தமிழாகத்தான் தெரியும். இது கணித்தமிழ் உலகில் முக்கியமானதோர் வளர்ச்சி. மேற்படி தமிழ் எழுத்துருக்களின் பல்வேறு குறிமுறை நியமங்களின் வளர்ச்சிப்போக்கினூடு பதிவுகளும் வள்ர்ந்து வந்திருக்கின்றது. இதற்காக மேற்படி வளர்ச்சிப்போக்குக்குப் பங்களித்த தகவற் தொழில்நுட்பத்
தொழில் நுட்ப வல்லுநர்களுக்கெல்லாம் பதிவுகள் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.

பதிவுகளின் ஆரம்பகாலத்துப் படைப்புகள் நூற்றுக் கணக்கில் 'அஸ்கி', 'திஸ்கி' போன்ற எழுத்துக் குறிமுறை நியமத்திலுள்ளன. அவற்றையேல்லாம் எழுத்து உருமாற்றிகளைப் பாவித்து இன்றைய ஒருங்குறி முறைக்கு மாற்ற வேண்டும். இது மிகப்பெரிய வேலை. இதனைத் தற்போதுள்ள சூழலில் என்னால் தனித்துச் செய்ய முடியாது. காலப்போக்கில் பகுதி பகுதியாக மேற்படி உருமாற்றத்தைச் செய்ய வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தொண்டர்களாக இணைந்து பணியாற்றலாம்.

பதிவுகளின் வளர்ச்சி பற்றி...

2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பதிவுகள் இணைய இதழ் எட்டு ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இணைய இதழ்கள் பற்றிய பலவேறு பல்கலைக் கழக ஆய்வுக் கட்டுரைகளில் பதிவுகள் முக்கியமானதோர் இணைய இதழாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பதிவுகளில் வெளிவந்த படைப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் (என்னுடைய படைப்புகளுட்பட) தமிழகப் பல்கலைக் கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகள், அறிமுகப்படைப்பாளிகளெனப் பலர் ஆர்வத்துடன் மாதாமாதம் பதிவுகளுக்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றார்கள். விரும்பியவர்கள் சந்தா வழங்கி ஆதரவளிக்கலாமென்று கோரியிருந்த போதிலும் பதிவுகள் இதழ் இன்னும் இலவசமாகவே வெளிவருகின்றது.

பதிவுகள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் ஆர்வம் மிக்க பங்களிப்புடன் தொடர்ந்து வெளிவருகின்ற போதும் , இணைய இதழைப் பொறுத்தவரையில் இன்னும் அதன் ஆசிரியராக, இணையத் தளப் பராமரிப்பாளராக (Webmaster), அதன் பதிப்பாளராக நானே இருந்து வருகின்றேன். கடந்த எட்டு வருடங்களில் இதற்காக நான் செலவழித்த, செலவழிக்கும் நேரம் அதிகமானது. இருந்தும் இன்னும் என் ஆர்வம் குறைந்து விடவில்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவுகளை பல்வேறு நாடுகளிலிருந்தும் வாசித்து வருகின்றார்கள். கடிதங்கள், படைப்புகள் மூலம் ஊக்குவித்து வருகின்றார்கள். தனியொருவனாக நின்று, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ கலை, இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகளின் ஒத்துழைப்புடன் பதிவுகளை நடாத்தி வருவதை இணையத்தின் வரவு சாத்தியமாக்கியுள்ளது.

ஒருவர் அர்ப்பணிப்புடன் மற்றும் ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன், தகவற் தொழில்நுட்ப அறிவினையும் உள்வாங்கி, இது போன்றதொரு இணைய இதழொன்றினை வெளிக் கொணர முடியும், இவ்விதம் வெளிவரும் இணைய இதழொன்றின் மூலம் ஆயிரக்கணக்கான உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசகர்களை இலகுவாகச் சென்றடைய முடியும். இது அச்சு இதழொன்றில் இவ்வளவு இலகுவாகச் சாத்தியப்பட்டிருக்காது.

பதிவுகளின் , இணைய இதழ்களின் எதிர்காலம் பற்றி....

என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகத் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் பயன்கள் பல். இணையம் மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.

இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் ஆரம்ப காலத் தமிழ் இணைய இதழ்களின் சேவை, பதிவுகளுட்பட, வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.

ngiri2704@rogers.com

' நான் அவனில்லை'.. - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை!

' நான் அவனில்லை'..

- வ.ந.கிரிதரன்


கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...

தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.

இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன் எப்பொழுதுமே தனிமையில் சிந்திப்ப்தை மிகவும் விரும்புவன. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இதற்குச் சமாந்தரமாக இருக்கக் கூடிய ஏனைய பிரபஞ்சங்கள், காலத்தினூடு பயணித்தல், கருந்துளைகள்... பற்றியெல்லாம் அவன் பல நூல்கள் , ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பவன். பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி ஆராய்ந்தவனின் இருப்பு விரைவிலேயே இல்லாமல் போகப் போகிறதா?

அவனது முடிவை அவன் தனித்து நின்று எதிர்நோக்க வேண்டியதுதான். மானிடர்களிடையே குடும்பம், நட்பு போன்ற உறவுகளற்றுப் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டிருந்தன. இனப்பெருக்கம் மானிடப் பண்ணைகளில் நடைபெறத் தொடங்கி விட்டிருந்தன. மேலும் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், போர் வீரர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மத குருக்களென ஒரே மாதிரியான மானுடர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆண் விந்துக்களும், பெண் முட்டைகளும் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு பல்வேறு வகைகளில் கலந்து மானுடர் உருவாக்கம் தேவைகளுக்கேற்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு குடும்ப உறவுகள் மின்னூல்களில் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. அவற்றைப் பற்றி எண்ணும்போது அவன் அன்றைய மானுடர்களின் அன்புநிறைந்த வாழ்க்கை வட்டம் பற்றி ஆச்சரியப்படுவான்.

அவனது சிந்தனையோட்டம் பல்கிக் கிளை விரிந்தோடிக் கொண்டிருந்தது.

'நாளையுடன் இந்த உலகுடனான எனது இந்த இருப்பு முடிந்து விடும். அதன் பிறகு நான் என்னவாவேன்? " இவ்விதம் அவன் சிந்தித்தான். இதற்கான தெளிவான விடை கிடைக்காததொரு நிலையில்தான் இன்னும் மானுடகுலமிருந்தது. பொருளா? சக்தியா? பொருள்முதல்வாதமா? கருத்து முதல்வாதமா? இவ்விதமான தத்துவப் போராட்டம் இன்னும் முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் அவன் முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அவன் கண்களின் முன் திடீரென் ஒரு கோளம் போன்றதொரு வடிவம் தோன்றி மறைந்தது. அவன் திகைப்பு அடங்குவதற்குள் அதனைத் தொடர்ந்து மேலும் சிறிய,பெரிய கோளங்கள் சில தோன்றி மறைந்தன.

இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரனுக்குச் சிறிது நேரம் நடந்த நிகழ்வுகளைக் கிரகிப்பதற்குக் கடினமாகவிருந்தது. தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதிலொரு சந்தேகம் எழுந்தது. அடுத்தநாள் மரண தண்டனையென்பதால் அவனது புத்தி பேதலித்து விட்டதாயென்ன? இவ்விதமாக அவன் ஒரு முடிவுக்கும் வராமல் திணறிக்கொண்டிருந்த வேளையில் அவன் முன்னால் மேலுமொரு அதிசயம் நிகழ்ந்தது.

இம்முறை அவன் முன்னால் ஒரு வெள்ளை நிறக் காகிதம், A-1 அளவில் தோன்றி , செங்குத்தாக அவன் வாசிப்பதற்கு இலகுவாக நின்றது. அக்காகிதம் மறையாமல் நிலைத்து நிற்கவே அவனுக்குத் தான் காண்பது கனவல்ல என்பது புரிந்தது.

அதில் பின்வருமாறு எழுதியிருந்தது:

'நண்பா! என்ன திகைத்துப் போய் விட்டாயா?'

அதனைப் படித்துவிட்டு அதற்குப் பதிலிறுக்கும் முகமாக 'ஆம்' என்று தலையசைத்தான் இயற்பியல் விஞ்ஞானி.

இப்பொழுது அந்தக் காகிதம் மறைந்து மீண்டும் தோன்றியது. இம்முறை அதில் கீழுள்ளவாறு எழுதப் பட்டிருந்தது:

'பயப்படாதே நண்பா! நான் உனது பிரபஞ்சத்துடன் கூடவே இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பிரபஞ்சங்களில் ஒன்றினைச் சேர்ந்த உயிரினம். எங்களது பிரபஞ்சம் உங்களுடையதை விட பதினான்கு வெளிப் பரிமாணங்களும் , ஒரு காலப்பரிமாணமும் கொண்டது. அதனால் உங்களது பிரபஞ்சத்தினுள் நாம் தோன்றும்போது மட்டும் , உங்களது முப்பரிமாணங்களுக்குரிய எங்களது உருவத்தின் பகுதிகள் தெரியும். ஆனால் உங்களால் எங்களின் முழுத்தோற்றத்தினையும் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் உங்களது தோற்றம் மற்றும் செய்ற்பாடுகள் அனைத்தையுமே பார்க்க முடியும்..'

'அப்படியா..!' என்று வியந்து போனான் இயற்பியல் விஞ்ஞானி.

அதன்பின் அவர்களுக்கிடையிலான உரையாடற் தொடர்பானது அவன் கூறுவதும், அதற்குப் பதிலாக அந்தப் பல்பரிமாண உயிரினத்தின் காகிதப் பதில்களுமாகத் தொடர்ந்தது. அதனை இலகுவாக்கும் பொருட்டுக் கீழுள்ளவாறு உரையாடல் குறிப்பிடப்படும்.

இயற்பியல் விஞ்ஞானி: ' உங்களால எங்கள் மொழியை வாசிக்க முடிகிறது. ஏன் பேச முடியவில்லை..'

அண்டவெளி உயிரினம்: 'எங்களுக்கிடையிலான உரையாடல்களெல்லாம் உங்களைப் போல் கூறுவதும் பதிலிறுப்பதுமாகத் தொடர்வதில்லை. மாறாக நினைப்பதும், அவற்றை உணர்வதுமாகத் தொடருமொரு செயற்பாடு. அதனால் எங்களிடையே உங்களுடையதைப் போன்ற ஒலியை மையமாகக் கொண்ட உரையாடல் நிலவுவதில்லை. அதற்குரிய உறுப்புகளின் தேவைகளும் இருப்பதில்லை.'

இயற்பியல் விஞ்ஞானி: 'எவ்வளவு ஆச்சரியமாகவும், திருப்தியாகவுமிருக்கிறது. என் இருப்பின் முடிவுக்கண்மையில் எனக்கு இபப்டியொரு அறிதலும், புரிதலுமா? '

அண்டவெளி உயிரினம்: 'என்ன கூறுகிறாய் நண்பா! என்ன உன் இருப்பு முடியும் தறுவாயிலிருக்கிறதா? ஏன்..?'

இயற்பியல் விஞ்ஞானி இதற்குப் பதிலாகத் தன் கதையினையும், நிறைவேற்றப்படவுள்ள தண்டனை பற்றியும் குறிப்பிட்டான். இதற்குப் பதிலாகச் சிறிது நேரம் அண்டவெளி உயிரினத்திடமிருந்து மெளனம் நிலவியது. பின்னர் அது கூறியது.

'இதற்கு நீ ஏன் கவலைபடுகிறாய்? கவலையை விடு! இந்த இக்கட்டிலிருந்து உன்னை நான் தப்ப வைக்க முடியும். நீ உன் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி விடுதலையானதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்."

இயற்பியல் விஞ்ஞானி: 'உன்னால் என்னை எவ்விதம் காப்பாற்ற முடியுமென நினைக்கிறாய்?"

அண்டவெளி உயிரினம்: 'நாளை உனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதனால் , காலதாமதம் செய்வ்தற்குரிய தருணமல்ல இது. அதனால்...'

இயற்பியல் விஞ்ஞானி: 'அதனால்....'

அண்டவெளி உயிரினம்: 'முதலில் இன்று உன் சிறைக் காவலர்களுடன் தொடர்பு கொண்டு உன் இறுதி முறையான மேன்முறையீட்டினை விண்ணப்பித்துவிடு. உங்கள் உலகத்துச் சட்டதிட்டங்களின்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்வரையில் தகுந்த காரணம் இருப்பின் , நிரூபிக்கப்படின் அவ்விதமான மேன்முறையீடுகளை விண்ணப்பிக்கலாமல்லவா?'

இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். உண்மைதான்...'

அண்டவெளி உயிரினம்: 'அவ்விதம் உன் மேன்முறையீட்டினை உடனடியாகவே விண்ணப்பித்து முதலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நீ உண்மையில் இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்; நிரூபிக்க வேண்டும். ..'

இய்ற்பியல் விஞ்ஞானி: 'அதெப்படி.. ஒன்றுமே புரியவில்லையே... எதற்காக நான் , இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரன் அல்லனென்று கூறவேண்டும்? நான் பாஸ்கரன் தானே! '

அண்டவெளி உயிரினம்: 'வேறு வழியில்லை.. அதுவொன்றுதான் தற்போதுள்ள இலகுவான வழி.. முதலில் நீ தப்ப வேண்டும். அதன்பின் எங்களுக்கிடையிலான தொடர்பு தொடரட்டும்...'

இயற்பியல் விஞ்ஞானி: '. ஒன்றுமே புரியவில்லையே.. நான் நானில்லையென்றால் வேறு யார்?'

அண்டவெளி உயிரினம்: ' இயற்பியல் விஞ்ஞானி பாஸ்கரனுக்கு அவனது இதயம் எந்தப் பக்கத்திலுள்ளது? "

இயற்பியல் விஞ்ஞானி: 'அதிலென்ன சந்தேகம்.. இடது புறத்தில்தான்..'

அண்டவெளி உயிரினம்: 'இயற்பியல் விஞ்ஞானியின் முக்கிய அடையாளங்களிலொன்றான பிறப்பு மச்சம் எந்தப் பக்கத்திலிருக்கிறது?'

இயற்பில விஞ்ஞானி: 'அது தாடையின் வலப்புறத்தில்தான்...'

அண்டவெளி உயிரினம்: ' அவற்றினை இடம் மாற்றி வைத்து விட்டால் வேலை சுலபமாகிவிடும். அதன் பின்னர் உனது மேன்முறையீட்டில் உண்மையான இயற்பியல் விஞ்ஞானியின் இதயம் இடது ப்றத்தில் இருப்பதையும், அவனது அங்க அடையாளங்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அவை எல்லாமே உன்னைப் பொறுத்தவரையில் இடம் மாறியிருக்கும். ஆக நீ - நான் அவனில்லை - என்று வாதாட வேண்டும். உன் உடலின் எல்லாப் பாகங்களுமே இடம் மாறியிருப்பதால் உன் இடது கை வலது கையாகவும், வலது கை இடது கையாகவுமிருக்கும். நீதி மனறத்திடமிருக்கும் தகவல்களின்படி அவர்களிடமிருப்பது போலியான கைரேகையாகவிருக்கும்.. என்ன புரிகிறதா?'

இயற்பியல் விஞ்ஞானி; 'ஏதோ கொஞ்சம் புரிகிறது. புரியாமலுமிருக்கிறது... ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது: நான் அவனில்லையென்று வாதாட வேண்டும் என்று. தற்போதுள்ள என் அங்கங்கள் தொடக்கம் அனைத்தையுமே தற்போதுள்ள இடத்திலிருந்து இடம் மாற்றி வைத்தால் இவையெல்லாம் சாத்தியமென்று நீ குறிப்பிடுவதும் புரிகிறது... ஆனால் அவையெல்லாம் - இடமாற்றம்- எவ்விதம் சாத்தியமென்றுதான் புரியவில்லை '

அண்டவெளி உயிரினம். 'சபாஷ்! நீ கெட்டிக்காரன் தான். உனக்கு எல்லாமே புரிகிறது ஒரு சிலவற்றைத் தவிர. ஆனால் இவ்விதமான புரிதல் உன்னைப் பொறுத்தவரையில் இயல்பானதொன்றுதான்...'

இயற்பியல் விஞ்ஞானி: 'என்ன இயல்பானதா.. என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகத்தான் கூறேன்?'

அண்டவெளி உயிரினம்: 'உன்னால் உணர முடியாது. காரணம்: உனது முப்பரிமாண எல்லைகள். அவற்றை மீறி உன்னால் உணர முடியாது. ஆனால் உனக்குக் கீழுள்ளவற்றை ஒப்ப்பிடுவதன்மூலம் அவற்றை , உன்னிலும் அதிகமான பரிமாணங்களின் சாத்தியங்கள் பற்றிய புரிதலுக்கு உன் அறிவு போதுமானது. உணர முடியாவிட்டாலும் புரிய முடியும்.'

அண்டவெளி உயிரினம் தொடர்ந்தது: ' மானுட நண்பா! இரு பரிமாணங்களிலுள்ள உலகமொன்றிருப்பின் அங்குள்ள உயிர்கள் தட்டையானவையாகத்தானிருக்கும். அவற்றால் உன்னால் உணர முடிந்த உயரத்துடன் கூடிய முப்பரிமாண உலகைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நீளமும் அகலமுமேயுள்ள சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல வேண்டுமானால் நீள அகலச் சுவர்களை உடைத்துதான் செல்ல வேண்டும். ஆனால் முப்பரிமாணங்களுள்ள உன்னால் மிக இலகுவாக உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினூடு அந்தத் தட்டை மனிதர்களை மேலெடுத்து மீண்டும் சிறைச்சாலைக்கு வெளியே அவர்களது தட்டைச் சிறைகளை உடைக்காமலே கொண்டு சென்று விட முடியும். நீ அவர்களை உனது மூன்றாவது பரிமாணமான உயரத்தினுள் எடுத்தவுடனேயே அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தட்டை உலகத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மறையவில்லை மூன்றாவது பரிமாணத்தினுள் இருப்பது உனக்கு மட்டும்தான் புரியும். இல்லையா? '

இயற்பியல் விஞ்ஞானி: 'ஆம். நீ கூறுவது தர்க்கரீதியாகச் சரியாகத்தானிருக்கிறது..'

அண்டவெளி உயிரினம்: 'அதுபோல்தான் .. இடது புறத்தில் இதயமுள்ள தட்டை உயிரினமொன்றை உனது பரிமாணத்தினுள் எடுத்து, 180 பாகையில் திருப்பி மீண்டும் அதனது உலகினுள் கொண்டு சென்று விட்டால் என்ன நடக்கும்? அதன் உறுப்புகளின் இடம் மாறியிருக்கும். புரிகிறதா? மானுடனே! புரிகிறதா?'

இயற்பியல் விஞ்ஞானி: 'புரிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னை இப்பொழுது உனது அதிஉயர் வெளிப் பரிமாணங்களிலொன்றினுள் அழைத்துச் சென்று, 180 பாகை திருப்பி , மீண்டும் இங்கு கொண்டுவந்து இறக்கி விடப்போகின்றாய். அப்படித்தானே!'

அண்டவெளி உயிரினம்: 'பட்சே அதெ! அதே!'

இயற்பியல் விஞ்ஞானி: 'அட உனக்கு மலையாளம் கூடத் தெரியுமா?'

அண்டவெளி உயிரினம்: 'எனக்குத் தெரியாத உன் பிரபஞ்சத்து மொழிகளே இல்லை. எல்லாவற்றையும் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும். முதலில் நீ விடுதலை பெற்று வா! அதன் பிறகு உனக்கு நான் இன்னும் பல அதிசயங்களைச் சொல்லித் தருவேன். அவற்றைப் பாவித்து நீ உன் உலகத்தில் மிகவும் பலமுள்ள ஆளாக மாறலாம். எப்பொழுதுமே என் உதவி உனக்குண்டு. அதற்கு முன்.. இப்பொழுது உன்னை நான் உனது முப்பரிமாணங்களிலும் மேலான இன்னொருமொரு வெளிக்குரிய பரிமாணத்தினுள் காவிச் செல்லப் போகின்றேன். இவ்விதம் பரிமாணங்களினூடு பயணிப்பதன் மூலம் உன் பிரபஞ்சத்தின் நெடுந்ததொலைவுகளைக் கூட மிக இலகுவாக, ஒரு சில கணங்களில் கடந்து விட முடியும்..... என்ன தயாரா?'

இயற்பியல் விஞ்ஞானி: கண்களை மூடிக் கொள்கிறான். 'அப்பனே! முருகா! எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் மீண்டும் என்னை இந்த மானுட , முப்பரிமாண உலகுக்கே கொண்டு வந்துவிட நீ அருள் புரிய வேண்டும்..'

அண்டவெளி உயிரினம்: ' என்ன கடவுளை வேண்டிக் கொள்கிறாயா? என் மேல் இன்னும் உனக்கு நம்பிக்கை வரவில்லையா..'

இயற்பியல்விஞ்ஞானி: சிறிது வெட்கித்தவனாக ' அப்படியொன்றுமில்லை. நீ என்னை இப்பொழுதே காவிச் செல்லலாம்...'

அடுத்த சில கணங்களில் நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்திலிருந்து இயற்பியல் விஞ்ஞானி மறைந்து மீண்டும் தோன்றினான்.

என்ன ஆச்சரியம்!

அவனாலே அவனை நம்ப முடியவில்லை. அவனது இதயம் வலது புறத்திலிருந்து துடித்துக் கொண்டிருந்தது. முன்பு வரை இடது பக்கமாகவிருந்த அவ்னது உடற் பாகங்கள் , பிறப்படையாளங்கள், அனைத்துமே வலப்புறமாக இடம் மாறியிருந்தன.

அண்டவெளி உயிரினம்: 'மானுட நண்பனே! சரி மீண்டும் நாளை உனது மறுபிறப்புக்குப் பின்னர் வருகிறேன். அதன் பின்னர் இன்னும் பலவற்றை உனக்குத் சொல்லித் தருவேன். மானுடராகிய உங்களவர்களின் உடல்களைத் திறக்காமல், வெட்டாமல் எவ்விதம் சத்திர சிகிச்சைகளச் செய்வ்து போன்ற பல விடயங்களில் என்னால் உனக்கு உதவ முடியும். உன் மேன்முறையீடு மூயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துகள். வருகிறேன். நண்பா! நன்கு இருண்டு விட்டது. இப்பொழுது நீ நன்கு தூங்கு. விடிந்ததும் முதல் வேலையாக உன் மேன் முறையீட்டினைச் செய். வருகிறேன்.'

இயற்பியல் விஞ்ஞானி: - (தனக்குள்) 'பலபரிமாண நண்பனே! உன் உதவிக்கு நன்றி'

இவ்விதமாக எண்ணியவன் தூக்கத்திலாழ்ந்தான். நாளை விடிந்ததும் அவன் தன் மறுவாழ்வுக்காக வாதாடுவான். தன் அங்க அடையாளங்கள், கை ரேகை, இதயத்தின் இருப்பிடம் பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து இயம்புவான் 'நான் அவனில்லை'யென்று.