Tuesday, August 22, 2006

திண்ணையில் வெளிவந்த வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில!

இரவு வான்!

விரிந்து,பரந்து, இருண்டு இரவு
வான் முடிவிலியாய் முடிவற்றுத்
தெரியும்; விரியும்; புரியுமா ?
பார்வைப் புலனின் புலப்படுத்துதல்
இரவு வானின் இருப்பின்
உண்மையையா ?
இருண்டிருக்கும் இந்த வான்
இயம்புவதிலேதும் இரகசியம்
தானுண்டோ ? நெஞ்சேயறி.
காண்பதெல்லாம் காட்சிப்
பிழையென்று காட்டுமோவிந்த
இரவு வான்.

ஒளிர்சுடரொவ்வொன்றும்
ஒளிவருடப் பிரிவினில்
ஒளிரும்; ஒரு கதை பகரும்;
விரியும் விசும்பும் விடை சொல்லி
விரியும்; காலத்தின் பதிவுகளைக்
காட்டிடுமொரு காலக் கண்ணாடியா
இந்த இரவு வான் ?

முடிந்தவற்றை, மடிந்தவற்றைக்
காவிவரும் ஒளிச்சுடர்கள்.
புராதனத்துப் படிமங்கள் தாங்கி நிற்குமேயிந்த
இரவு வான்;
சுடர்கோடியிருந்தும்
இருண்டிருக்கும் இரவு வான்;
அழிவு, தோற்றம், வளர்ச்சி பல
புலப்படுத்தும் இரவு வான்.

நத்துகள் கத்திடுமொரு
நள்ளிரவில்
நிலாகண்டு, அதன் வனப்பில்
நெஞ்சிழந்து, நெகிழ்ந்து
கிடக்கையிலும், வெளிபோல்
உள்ளுமொரு இரவு வானாய்
இருக்குமிந்த நெஞ்சும்
காலத்தினடுக்குகளைச்
சுமந்தபடி சாட்சியாக.

- திண்ணை ஜனவரி 13, 2002

அதிகாலைப் பொழுதுகள்

அதிகாலைப் பொழுதுகள்
அழகானவை. அற்புதமானவை - சில
அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில்
அழகாகக் கோடிழுக்கும்
நீர்க்காகத்தின்

நேர்த்தி கண்டு
நினைவிழந்திருக்கின்றேன்.
இன்னும் சில

அதிகாலைப் பொழுதுகளோ
அற்புதமானவை. விடாது பெய்த
இரவின் அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில்
வாற்பேத்தைகள் கும்மாளமிடும். பெரும்பாலான
அதிகாலைப் பொழுதுகளில்
நகாிற்குப் படையெடுப்பர்
நம் தொழிலாள வீரர்.
அவர்தம் விடிவு வேண்டி
அச்சமயங்களில்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.
விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி;
பனி தாங்கும் புற்கள்; புட்கள்.
இவையெல்லாம்
அதிகாலைப் பொழுதுகளுக்கு
அழகூட்டின. ஆயினெப்பொழுதுமே
அதிகாலைப் பொழுதுகள்
அது போன்றெ யிருந்ததில்லை. சில
அதிகாலைப் பொழுதுகள்
அவலத்தைத் தந்திருக்கின்றன.
அப்பொழுதெல்லாம்
எரிந்து கன்றி யுப்பிய
உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன். இரவின்
அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.
இப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
இல்லை தான். அவை
அழகாகவுமில்லை.
அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன்
ஆபத்தாகக் கூடத் தொிவதில்லை.
எத்தனை தரம் தான்

'காங்கிரீட் ' மரங்களையும்
பார்ப்பது ?
இப்பொழுதெல்லாம்

அதிகாலைப் பொழுதுகள்
சலிப்பைத் தருகின்றன,
சலிப்பூட்டுகின்றன.
இருந்தாலும் இன்னமும்
'விடிவை ' எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.

திண்ணை ஜனவரி 20, 2002

சொப்பன வாழ்வினில் மயங்கி.....

இரவில் மட்டும் பூத்திடும்
தாமரைகளா!

யார் சொன்னது
வருடத்தில் ஒரு முறைதான்
கார்த்திகைத் திருவிழா
வருமென்று ? இங்கு ஒவ்வொரு
இரவும்
திருவிழாதானே ?

யார் சொன்னது நட்சத்திரங்கள்
கொட்டிக் கிடப்பது
விண்ணில் மட்டும் தானென்று ?
இந்த
மண்ணிலும் தான்.

சுடர்களை மறைத்தன
நகரத்துச்
சுடர்களே. மரங்களை
மறைத்தன நகரத்து
மரங்களே.

சுடரிழந்த விண்ணை
ஈடு செய்யவா
சுடர் கொடுத்ததிந்த
மண். நகரத்து மண்.
மரமிழந்த மண்ணை
ஈடு செய்யவா
மரம் தந்ததிந்த
விண். நகரத்து விண்.

மண்ணில் வேரறுத்ததாலோ
விண்ணில் வேர் பதிக்கவெழுந்தன
இந்த மரங்கள்!அடைய வந்த
புட்கள் புல்லாகிப் போன
விந்தையென்னே!

விரையும் பேராறுகளை,
கணமேனும் ஆறுதலற்றோடும்
பெரு நதிகளை நீங்கள்
வேறெங்காவது கண்டதுண்டா ?

உங்கள் வேகத்தைக் கண்டு
வெட்கப்பட்டுத தானோ
இருக்கும் ஒன்றிரண்டும்
ஓடையாகி ஓரத்தில்
ஒதுங்கினவோ ?

சொப்பன வாழ்வினில் மயங்கி
நகரத்துச்
சொப்பன வாழ்வினில் மயங்கி
உனை மறந்தோம் ? இயற்கை
உனை மறந்தோம். நாம்
உனை மறந்தோம்.

திண்ணை டிசம்பர் 22, 2001

களு(ழு)த்துறை!

நேற்றுத் தான் அவன்
விடுதலையாகி வந்திருந்தான்.
இரு வருடங்கள் அவனுக்கு
இரு யுகங்களாகக் கழிந்திருந்தன.

நண்பனே! அவர்கள் உன்னை ,

உன் தோழர்களை
என்னவெல்லாம் செய்தார்கள் ?

உன் தோழர்கள் அங்கு

என்னவெல்லாம் செய்வார்கள் ?

காலத்தினையெவ்விதம் கழிப்பரோ ?

ஆசனத்துள் 'எஸ்லோன் ' வைத்து
அதனுள் முள் வைத்து
இழுத்த இழுப்பினில் நண்பன் ஒருவனின்
குடலே காணாமல் போனதுவாம்.
நண்பன் கூறினான்.
குடல் காணாமல் போனவன்
இன்னும் பால்பவுடர்
கலந்து தான் உணவருந்துகின்றானாம்.
நண்பன் மேலும் சொன்னான்.

துளையிடும் கருவியால்
ஒருவன் குதியினைத்
துளையிட்டதில் அவன்
தொலைந்தே போனானாம்.
நண்பன் சொன்னான்.

கற்பனையும் கனவுகளுமாக
வந்த பிஞ்சொன்று
'பிந்துனுவ 'வில்
பஞ்சாகிப் போனதுவாம்.

இது போல் பல, பல...
இன்னும் பல, பல...
நண்பன் சொன்னான்.

'நான் தப்பி விட்டேன். ஆனால்..அவர்கள்.. '
நண்பன் சொன்னான்.

வெளியில் வீசும்
புயலில் அவர்கள்
மறக்கப் பட்டுப் போனார்களா ?
வருடங்களெத்தனை அவர்
வாழ்வில் வந்து போயின ?
அவர்கள் உள்ளே இருப்பது
யாராலே ? யாருக்காக ?
எதனாலே ? எதற்காக ?

கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர் சுற்றமிழந்து
இன்னுமெத்தனை நாள் வாடுவதோ ?
குரல் கொடுப்பார் யாருளரோ ?
யாருளரோ ?

[ *இலங்கை தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் களுத்துறை வெலிக்கடைச் சிறைச்சாலையுட்படப் பல சிறைச்சாலைகளில் வருடக் கணக்கில் ,நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப் படாமல், கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அடையும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் 'பிந்துநுவ ' போன்ற சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப் பட்டுமுள்ளார்கள். அண்மையில் கூட இவர்கள் தமது இரத்ததில் கடிதம் எழுதி நீதி கேட்டிருப்பதாகப்பத்திாிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.]

திண்ணை நவமப்ர் 25, 2001

ஞானச்சுடரே! நீ எங்கு போயொளிந்தனையோ?


'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
ஞானச்சுடரே! நீ

எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?
நீ! எங்கு போயொளிந்தனையோ ?

திண்ணை நவமப்ர் 4, 2001

கவலையுள்ள மனிதன்!

எனக்குச் சாியான கவலை.
எதற்கெடுத்தாலும்
எப்பொழுதும்
ஒரே கவலை தான்.
கவலைக்கொரு எல்லை
வேண்டாமா ?
என்ன செய்வது ?
குப்புறப் படுத்தால் பின்னால்
னமே இடிந்து விழுத்து
விட்டாலென்ற கவலை.
அதற்காக மல்லாந்து படுக்கவா
முடிகிறது. முடிந்தால்
விழுகிற வானத்தைத்
தாங்குவதெப்படி என்கிற
கவலை.
யாருக்குத் தான் என் கவலை
புரியப் போகின்றதோ ?
சும்மாவா சொன்னார்கள்
அனுபவித்துப் பார்த்தால் தான்
தெரியும்\அவரவர் கவலை அவரவருக்குப்
புரியுமென்று.

திண்ணை செப்டம்பர் 9, 2002



No comments: