Sunday, May 03, 2020

சிறுகதை: சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."

'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'

வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.

"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.

தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.

"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.

ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.

நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.

"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."

கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.

"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.

அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.

"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.

போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.

"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.

"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.

"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.

"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."

ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.

சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.

"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".

"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.

"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.
- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை.

தொடர் நாவல்: குடிவரவாளன் - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!

 
இளங்கோ அருள்ராசாவிடம் ஹரிபாபுவுடனான வேலை முடிவுக்கு வந்த விடயத்தைக் கூறியபோது அவன் கொஞ்சமும் ஆச்சரியப்படவில்லை. "இதை நான் எப்பவோ எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாளைக்காவது வேலையும் தந்து சம்பளமும் தந்தானே. அதுக்காக அவனைப் பாராட்ட வேண்டியதுதான். அவனுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான்" என்றவன் கார்லோவிடம் பிரசுரங்கள் விநியோகிக்கும் வேலை கிடைத்தது பற்றிக் குறிப்பிட்டதும் "ஒரு விதத்திலை இதுவும் நல்லதுக்குத்தான்" என்றான்.

"அருள் எந்த விதத்திலை இது நல்லதென்று நீ நினைக்கிறாய்?"

"கார்லோவிடம் வேலை பின்னேரங்களிலை ஒரு சில மணித்தியாலங்கள்தானே. அப்ப நாள் முழுக்க எங்களுக்கும் நிறைய நேரமிருக்கும் வேறேதாவது நல்ல வேலை தேட. இல்லையா? அதோடை 'இமிகிரேசன்' அலுவலைப் பார்க்கலாம் இல்லையா..."

அருள்ராசா கூறியதும் சரியாகத்தான் பட்டது. "ஒரு விதத்திலை நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு... எல்லாமே நல்லதுக்குத்தான்.
பகல் முழுக்க வேறேதாவது வேலையைத் தேடிப்பார்க்க வேண்டியதுதான். சும்மா நேரம் இருக்குதென்று விஸ்கியை அடித்துப் போட்டுப் பகல் முழுக்கப் படுத்துப் படுத்துக் கிடக்கிறதில்லை. இந்த விசயத்திலை உன்னை நல்லக் கட்டுப்பாட்டிலை வைத்திருக்க வேண்டும் கண்டியோ?"

"நீ சொல்லுறதும் சரிதான். இப்பிடியே காலத்தை வீணக்கிக் கொண்டிருக்க முடியாது. எப்படியாவது நிரந்தரமானதொரு வேலையைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.."

"இல்லாவிட்டால்... கொஞ்சமும் காசு கீசு சேர்க்க முடியாது... இப்பப் பார்.. ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கையைக்
கொண்டோடிறதிலையே முடிஞ்சு போகுது. ஒரு பொழுதுபோக்கு அது இதென்று ஒன்றுமில்லை. எப்பவாவது இருந்திருந்திட்டு அடிக்கிற தண்ணிப் 'பார்ட்டி'யோடை எல்லாமே சரி..."

"என்ன செய்யிறதடா இளங்கோ... எல்லாம் இந்த இமிகிரேசக்காரங்களாலை வந்த கரைச்சல்தானே... அவங்கள் மட்டும் இந்நேரத்துக்கு 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டைத் த்ந்திருந்தாங்களென்றால் இந்த வேலைப் பிரச்சினை இந்நேரம் போயிருக்கும். ம்.. எல்லாம் காலம்.."

அருள்ராசா கூறுவதும் இளங்கோவுக்குச் சரியான கூற்றாகத்தான் பட்டது. அன்றிரவு எல்லோரும் தூக்கத்தில் சாய்ந்த பின்னும்
இளங்கோவுக்குத் தூக்கமே வரவில்லை. வழக்கமாக இவ்விதமான சமயங்களில் செய்வதுபோல் தனது குறிப்பேட்டையும், பாரதியார்
கவிதைகளையும் எடுத்துக் கொண்டு அறையில் தூக்கத்திலாழ்ந்திருப்பவர்களின் தூக்கத்தினைக் கலைப்பதற்கு விரும்பாமல் உணவறைக்கு வந்தான். சிறிது நேரம் பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதிலீடுபட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்க்கை சலிப்பும், விரக்தியுமாகச் சாய்ந்திருக்கும் சமயங்களிலெல்லாம் அவனுக்குத் துணையாக இருப்பவை நூல்களே. முக்கியமாகப் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கும்போது அவனது சோர்ந்து, துவண்டிருக்கும் மனதானது உற்சாகம் பெற்றுத் துள்ளிக் குதிக்கவாரம்பித்துவிடும்.
பாரதியாரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க மனது இலேசாகிக் கொண்டே வந்தது. உள்ளத்தில் உறுதி கலந்த உற்சாக உணர்வுகள்
சிறகடிக்கவாரம்பித்தன. அதன்பின் தனது குறிப்பேட்டினை எடுத்து எழுதவாரம்பித்தான். குறிப்பேடு பல வழிகளில் அவனுக்குதவி புரிந்து கொண்டிருந்தது. மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைப்பதற்குரிய சுமைதாங்கியாக, வாழ்க்கையைத் திட்டமிடுவதற்குரியதொரு சாதனமாக, அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்துகொளவதற்குரியதொரு துணையாகப் பல்வகைகளில் உதவிக்கொண்டிருந்தது. குறிப்பேட்டினைப் பிரித்தவன் முதலில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளைச் சிறிது நேரம் வாசித்தான். அதன்பின் எழுதவாரம்பித்தான்:

'நாட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஆறுமாதங்கள் கழிந்து விட்டன. முதல் மூன்று மாதங்கள் தடுப்பு முகாமில். அடுத்த மூன்று மாதங்கள் வெளியில் காற்றிலாடும் சருகாக. ஒவ்வொரு நாளையும் கழிப்பதற்கான போராட்டத்திலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. இரவு வானை, மதியை, சுடரை, வீசும் தென்றலை, புள்ளை, அந்தியின் அடிவானத்து வர்ண விளையாட்டை.. இவற்றையெல்லாம் மனம்விட்டு இரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இருப்புப் பிரச்சினையே பெரியதொரு பிரச்சினை. இதற்கு விரைவில் முடிவொன்றினைக் கட்ட வேண்டும். இப்படியே வாழ்வினைச் செல்ல விடக்கூடாது. போனது போகட்டும். இனி அடுத்த ஆறு மாதத்திற்குள் என் வாழ்க்கை உறுதியானதொரு அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். அதற்கான உறுதியை இப்பொழுதே இந்தக் கணமே எடுத்துக் கொள்கின்றேன். என் அருமைக் குறிப்பேடே! நீ தான் இதற்குச் சாட்சி!

வீட்டாருக்கு இங்கு நான் படுகிற கஷ்ட்டங்கள் தெரியாது. சொன்னாலும் புரியப் போவதில்லை. ஒரு நேரச் சாப்பாடிற்காக என் மண்ணில் ஒவ்வொரு நாளையும் குடும்பம், குட்டிகளுடன் கழிக்கும் குடியானவர்களின் அன்றாட நிலைமையை இந்தக் கணத்தில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. எந்தவித நம்பிக்கைகளுமின்றி அன்றாடம் வாழ்வே போராட்டமாக வாழும் மக்களுடன் ஒப்பிடும்பொழுது என்நிலை ஒரு பொருட்டேயல்ல. ஆனால் இவற்றையெல்லாம் வீட்டார் உணரும் நிலையில் இருப்பார்களென்று நினைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் மகன் உலகின் குபேரபுரியில் வாழ்கிறான். 'பொடியன் அமெரிக்காவிலை' என்று சொல்லும்போதே அவர்களது வாயெல்லாம் பூரிப்பால் மலர்ந்து விடும். ஆனால் 'பொடியன் இங்கு படுகிற பாட்டை' நேரில் வந்து பார்த்தால் மட்டும்தான் அவர்களால் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும்.' இவ்விதம் சிறிது நேரம் குறிப்பேட்டில் எழுதினான். அதன் பின் இளங்கோவின் கவனம் அடுத்த ஆறு மாதங்களைப் பற்றிய எதிர்காலத் திட்டங்களில் ஆழ்ந்து போனது. அவற்றைப் பற்றி எழுதும்போது மேலும் மேலும் உள்ளம் நம்பிக்கையால், உற்சாகத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது.

'சரியாக இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த மண்ணில் மிகவும் உறுதியாகக் காலூன்ற வேண்டும். அதற்கு இயலுமானவரையில் குடிவரவு அதிகாரிகளுடன் மீண்டும் மீண்டும் கதைத்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறு மாதங்களுக்குள் எதுவுமே சரிவராவிட்டால் தொடர்ந்தும் இங்கிருப்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. எந்த விதச் சட்டரீதியான அடையாளத்துக்குரிய ஆவணங்களுமில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கக் கூட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தரின் துணையை நாட வேண்டும். இதற்கொரு முடிவை எவ்வளவு விரைவில் கட்ட வேண்டுமோ அவ்வளவு விரைவில் கட்ட வேண்டும். இந்த விசயத்தில கடமையைச் செய்வேன். பலனை எதிர்பார்க்காமல். ஆனால் செயலுக்குரிய பலனெதுவுமில்லாதிருக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமெதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் பலனை எதிர்பார்க்க வேண்டியதுதான். அதுவரையில் எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் முடிந்தவரையில் முயல வேண்டியதுதான். அதன் பிறகும் எந்தவிதப் பயனும் விளையாவிட்டால் இந்த மண்ணில் நான் ஒருபோதுமே இருக்கப் போவதில்லை.

விறகுவெட்டி, தெருவிளக்கில் படித்த ஆபிரகாம் லிங்கனுக்குச் சாத்தியமான அமெரிக்கக் கனவு எனக்குச் சாத்தியமாக வேண்டுமென்றால் முதலில் எனக்கும் அவர்களுக்கிருந்ததைப் போல் இந்த மண்ணில் காலூன்றுவதற்குரியதோரிடம் , அது தற்காலிகமாகவேனுமிருக்க வேண்டும். அதனை இந்த அரசு செய்து தர வேண்டும். அடுத்த ஆறு மாதங்களிலாவது அதனை இந்த அரசு செய்து தருமா?

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் அகதிகளுக்கு நீரிலொரு சட்டம்; நிலத்திலொரு சட்டம். ஓடிவரும் அகதிகளுக்குச் சுதந்திரவொளி காட்டி இருகரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய உன்னால் அது முடியாமல் போனதினால் ஒருவேளை சிலையாகிப் போனாயோ

சுதந்திரதேவியே! இந்த உலகுக்கெல்லாம் நீ விடுதலையினையும், அது பற்றிய ஞானத்தினையும் போதிப்பதாகக் கூறுகின்றார்களே!
ஆனால். என் விடயத்தை எடுத்துப் பார். இங்குள்ள தடுப்பு முகாம்களுக்குள் அன்றாடம் கனவுகளுடனும், கற்பனைகளுடனும்,
ஏக்கங்களுடனும் வளைய வரும் இந்தப் பூவுலகின் பலவேறு திக்குகளிலிருந்தும் வந்து வாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அகதிகளை எண்ணிப் பார்! உலகுக்கெல்லாம் சுதந்திரத்தைப் போதிக்குமுன் மண்ணில் அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கேனிந்த நிலை? என்னைப் பொறுத்தவரையில் இந்த மண்ணை நோக்கிக் களவாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வந்தவனல்லன். முறையான ஆவணங்களுடன் இன்னொரு நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டிய விமானம் கொண்டு
செல்ல மறுத்து விட்ட நிலையினால் இந்த மண்ணில் நிர்க்கதிக்குள்ளாகிப் போனவன். சட்டரீதியாக இந்நாட்டினுள் நுழைந்தவனைச் சட்டவிரோதமாக நுழைந்தவனென்ற பிரிவில் வைத்துத் தடுப்பு முகாமில் அடைத்து வைத்ததும் நீ சுதந்திரத்தைப் போதிக்குமிந்த மண்ணில்தானே நிகழ்ந்தது. சுதந்திரதேவியே!'

இவ்விதம் சிறிதுநேரம் மனப்பாரங்களையெல்லாம் தனது உற்ற துணையான அந்தக் குறிப்பேட்டில் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.
இவ்விதம் சுமைகளை இறக்கிய மனதில் சிறிது உறுதியும், உற்சாகமும் குமிழியிட்டன. இறுதியாக இவ்விதம் எழுதினான்: -
சுதந்திரதேவியே! உன் மண்ணில் நீ போதிக்கும் சுதந்திரம் என்னைப் போன்றவ்ர்களுக்கு மறுக்கப்பட்டபோதும் நான் உன்னைப் போற்றுகின்றேன். நீ போதிக்கும் சுதந்திரத்தின் அருமையினை உணர்ந்தவன் நான். அதனால் உன்னைப் போற்றுகின்றேன். இரவிலும், பகலிலும், மழையிலும், வெயிலிலும் தனியாக உயர்ந்து நின்று விடுதலையினை உலகுக்கெல்லாம் போதிக்கின்றாயே! அந்தத் தியாகத்தை நான் மதிக்கின்றேன். 'எத்தனை இடர் வரினும் தளர்ந்து விடாதே! விடுதலைக்காகப் போராடு! உலக விடுதலைக்காகப் போராடு!' என்று நீ இயம்புவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சுதந்திரதேவியே நீ வாழி! -

இவ்விதம் உணர்வுச் சுமைகளைக் குறிப்பேட்டிலிறக்கியதும் உள்ளத்தில்தானெத்தனை மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியுடன் பாரதியாரின் கவிதை நூலினை மீண்டும் பிரித்தான் இளங்கோ.

'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.......
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை , யச்சமில்லை, அச்சமென்ப தில்லையே.'

அதன்பின்னர் நண்பர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் மெதுவாக வந்தவன் தன் படுக்கையில் சாய்ந்தான். சாய்ந்தவனை விரைவிலேயே நித்திராதேவி வந்து அரவணைத்துக் கொண்டாள். அவளது அரவணைப்புக்குள் தஞ்சமாவதற்கு முன்னர் அவன் பின்வருமாறு உறுதியாக நினைத்துக் கொண்டான்: 'இன்னும் ஆறு மாதங்கள் மட்டும்தான். அதன்பிறகு சரிவராவிட்டால் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டியதுதான்.' இவ்விதமாக எதிர்காலம் பற்றியதொரு தெளிவான சிந்தனையால் இளகிக் கிடந்தவனை நித்திராதேவி மிகவும் இலகுவாகவே அணைத்துக் கொண்டாள்..

[தொடரும்]

Tuesday, August 03, 2010

முள்ளிவாய்க்கால்! - வ.ந.கிரிதரன் -


[ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவுபெற்றது அதன் பின்புதான். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் இன்னுமொரு திருப்புமுனை. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தம் எதிர்பாராதவகையில் முடிவுக்கு வந்தது. கருப்பு சூலை 1983இல் இந்தியாவின் ஆதரவுடன் விரிவுபெற்ற ஆயுதப் போராட்டம், 2009 மேயில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மேற்குநாடுகளின் ஆதரவுடன் முடிவுக்கு வந்தது. ஈழத்தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து இன்னுமொரு திக்கில் விரியப் போகிறது. ஆயுதத்தை நோக்கியா அல்லது அமைதியை நோக்கியா என்பதைக் காலம் உணர்த்தும். ]

1.

மனிக் பண்ணை தடுப்பு முகாமில் வாழ்க்கை ஒரு வருடத்தைத் தாண்டியோடிவிட்டதா? இதயச்சந்திரனுக்கு நம்பவே முடியவில்லை. அதை மட்டுமா அவனால் நம்ப முடியவில்லை.. அவன் இன்னும் உயிருடன் இருப்பதையும்தான் நம்ப முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற அந்தக் கொடிய போரின் இறுதி நாட்கள்... அந்த நாட்களின் ஒவ்வொரு கணங்களும் இன்னும் அவன் ஞாபகத்தில் பசுமையாக இருக்கின்றன. அவன் மறையும் வரையும் அவன் நெஞ்சை விட்டு அவை மறையப் போவதில்லை. போரின் கொடூரத்தை அறிந்த, அனுபவித்த நாட்கள். இருப்பு பற்றிய அவனது புரிதல்களை அடியோடு மாற்றிவிட்ட நாட்கள். எவ்விதம் நெஞ்சை விட்டகலும்?

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகளும், மக்களும் அடைபட்டுக் கிடந்த நிலையில் , இலங்கை அரசின் பல்வேறு வகையான தாக்குதல்களும்
தீவிரமடைந்திருந்தன. எறிகணைகத் தாக்குதல்கள், கொத்தணிக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன வாயுத் தாக்குதல்கள்... ஆயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில்... பாதுகாப்பு வலயங்களெல்லாம் பாதுகாப்பற்றுப் போன அந்தக் கணங்கள்... மானுடம் தன் நாகரிகத்தை இழந்து அம்மணமாக நின்ற தருணங்களவை. உயிருக்கே உத்தரவாதமற்றுப் போன பொழுதுகள் அதுவரை மக்கள் கண்ட கனவுகளை, கற்பனைகளை, எதிர்கால இலட்சியங்களை, குடும்ப உறவுகளை, வரையறுத்த நீதி, நியாயக் கோட்பாடுகளையெல்லாம் துவம்சம் செய்துவிட்டு வெறியாட்டமாடிய போர் அரக்கரின் அட்டகாசத்தால் சமூக அமைப்புகளும், சூழலும் சிதைந்து போயிருந்த கொடிய தருணங்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் சர்வதேசமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அன்று ருவாண்டா! இன்று சிறிலங்கா! அளவில் சிறிதானாலும், அழிவின் தன்மையில் மாறுதலேது?

சிந்தனை வயப்பட்டுக் கிடந்தவனின் கவனம் சரோஜாவின், ஆனந்தனின் பக்கம் திரும்பியது. சரோஜாவையும், ஆனந்தனையும் அவனது வாழ்வுடன் பிணைத்துவிட்டது எது? அதுதான் விதியா? இவற்றிலெல்லாம் ஒரு காலத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்தவனின் சிந்தனையா இவ்விதம் திரும்பியிருக்கின்றது? அவனுக்கு அவனை எண்ண வியப்பாகவிருந்தது. விரக்தியாகவுமிருந்தது. காலம், அதன் கோலமும் எவ்விதம் ஒருவரை தலைகீழாக மாற்றி விடுகிறது?

புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்கப்பட்டு, எஞ்சியிருந்த உடையார்கட்டு மருத்துவமனையும் தாக்கப்பட்டபோதுதான், அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் மனைவி, மகள்மாரை இழந்திருந்த இதயச்சந்திரன், எங்கே ஓடுகிறோமென்று தெரியாத நிலையில், உயிரைக் காப்பதற்காக சனங்களோடு சனங்களாக ஓடிக்கொண்டிருந்தபோதுதான், வழியில் சரோஜாவைக் கண்டான். கைகளில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த, ஏற்கனவே உயிரிழந்திருந்த குழந்தையொன்றுடன் , அக்குழந்தை இற்ந்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாமல், வீதியோரம் பேயறைந்தவளாக, சித்தப்பிரமை பிடித்தவளாகக் காணப்பட்ட சரோஜாவைக் கண்டதும் , அதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களில் தன் குழந்தைகளையும், மனைவியையும் இழந்திருந்த இதயச்சந்திரனால் அவளை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. அவ்விதம் விட்டு ஓடியிருந்தால் அவள் அரச படைகளின் குண்டு மழைக்குள் சிக்கி எந்தக் கணத்திலும் உயிர் துறக்கலாம்? மந்தைகளாகத் திரண்டோடிக் கொண்டிருக்கும் அகதிகளின் கால்களுக்குள் அகப்பட்டு உருக்குலையலாம்?

குழந்தையை அருகில் கிடந்த இடிந்த குடிசையொன்றில் வைத்துவிட்டுச் சரோஜாவையும் இழுத்தபடியே ஓடினான். அவ்விதமாக அவர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்திணைந்து கொண்டவந்தான் ஆனந்தன். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அவர்களைப் போல் அவனும் தன் தாய், தந்தை, சகோதரர்களை இழந்து, யாருமற்ற நிலையில் சனங்களோடு சனங்களாக ஓடிக் கொண்டிருந்தான். மிகவும் பயந்து போயிருந்தான்.

அவனையும், சரோஜாவையும் இழுத்தபடி இதயச்சந்திரனும் ஓடியோடி, இறுதியில் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்தான்.. அதன் பின் இதுவரையில் தடுப்பு முகாமில் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கட்டம் கட்டமாகத் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிலைமை முன்பிருந்ததை விடப் பரவாயில்லை. ஆனால் ஆரம்பத்தில் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான மக்களை மிருகங்க்ளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததொரு பெரியதொரு பட்டியாகவே அந்த முகாம் விளங்கியது. அரசின் உளவுத்துறை அதிகாரிகள் முகாமெங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். புலிகளென்னும் சந்தேகத்தின் பெயரில் இளைஞர்கள், யுவதிகளென நாளுக்கு நாள் காணமல் போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளானது பற்றிய கதைகள் முகாமெங்கும் நிறைந்திருந்தது. குடும்ப உறுப்பினர்களையே பிரித்து, வெவ்வேறிடங்களில்

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவற்றை இப்பொழுது எண்ணவே அவனுக்கு ஒருவித அச்சமாகவிருந்தது.

ஒரு கணம் அவனது பார்வை விரிந்து கிடந்த விண்ணை நோக்கியது. கண்ணுக்கெட்டியதூரம் வரையில் நீலப்படுதாவாக விரிந்து கிடந்த விண் முன்பென்றால் உணர்வுகளை வருடிச் சென்றிருக்கும். இப்பொழுதோ கேள்விகளையே எழுப்ப முனைந்தது.

விரிந்து கிடக்கும் பெருவெளி!
விரைந்தோடும் சுடரும், கோளும்.
விரிவும் தெரியவில்லை!
விரைவும் புரியவில்லை!
சின்னஞ்சிறு கோளுக்குள்,
சின்னஞ்சிறு தீவிற்குள்,
குத்து, வெட்டுகள்!
புரிந்திருந்தால்
படர்ந்திருக்குமோ
சாந்தி!

இவ்விதமாக அவனது மனதினுள் கவிதை வரிகள் சில எழுந்தன. எத்தனை காலம் எழுதி. இத்தகையதொரு பேரழிவுச் சூழலில் கவிதையெங்கே வரும்?


2.

இந்த ஒரு வருடத்தில் அவர்கள் மூவரும் ஒன்றாகத் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டினுள் 'மனிக்பார்ம்'முகாமில் வ்சித்து வந்தாலும், இற்ந்தகாலம் தந்த நினைவுச் சுமையிலிருந்தும், எதிர்காலம் பற்றிய வெறுமையான , நம்பிக்கையற்ற் உணர்வுகளிலிருந்தும்
விடுபடமுடியாதவர்களாகவே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு அவனது மனைவி வதனாவையும், மகள்மார்கள் ஆஷா, ஷோபா இருவரையும் மறக்க முடியவில்லை. மிகவும் மென்மையான்வள் இளையவள் ஷோபா. அக்கவென்றால் அவளுக்கு உயிர். இருவருமே ஒருவருக்கொருவர் சகோதரிகளாய், சிநேகிதிகளாய் எவ்வளவுதூரம் ஒன்றித்துப் போயிருந்தார்கள். அவர்களைப்பற்றி, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் அவனும், வதனாவும் எவ்வளவு கற்பனைகளைப் படர விட்டிருப்பார்கள்? எல்லாமே எவ்விதம் அடித்து நொருக்கப்பட்டு விட்டன?

மனிதர்களால் எவ்விதம் இவ்விதம் வெறிகொண்டு தாண்டவமாட முடிகிறது?

இப்பொழுது அவன் முன்னாலுள்ள பிரச்சினை. வெளியில் செல்வதானால் சரோஜாவையும், ஆனந்தனையும் என்ன செய்வது? சரோஜா மன்னார்ப் பக்கமிருந்து ஓடியோடி வன்னிக்கு வந்திருந்தவள் போரில் அகப்பட்டிருந்தாள். அவனது நிலையும் இதுதான். அவனும் முழங்காவில் பகுதியிலிருந்து ஓடி வந்திருந்தான். ஆனந்தனோ கிளிநொச்சி முரசுமொட்டையைச் சேர்ந்தவன். போர்ச் சூழல் எவ்விதம் அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து விட்டிருந்தது. அவளோ இன்னொருத்தரின் மனைவியாக, தனக்கென்றொரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவள். அவனோ அவளைப்போல் தன் மனைவி, குழந்தைகளென தனக்கொரு வட்டத்தைப் போட்டு , அதனுள் வாழ்ந்து
வந்தவன். ஆனந்தனின் நிலையும் அதுதானே... அவனும் தன் தாய், தந்தையென வாழ்ந்து வந்திருந்தவன். சிந்தனையினின்றும் நீங்கியவனாக, நனவுலகிற்கு வந்த இதயச்சந்திரன் தனக்குள்ளாகவே தீர்மானமொன்றினை எடுத்தவனாக , சரோஜாவுடன் எப்படியும்
இது விடயமாகக் கதைத்துவிட வேண்டுமென்று எண்ணினான். அப்பொழுதுதான் ஆனந்தன் அருகிலிருந்த அவனையொத்த சிறுவர்கள் சிலரைச் சிந்திப்பதற்காகச் சென்றிருந்தான் என்பது நினைவுக்கு வந்தது. நல்லதாகப் போய் விட்டதென்று பட்டது. முதலில் சரோஜாவுடன் கதைப்பதே நல்லதென்ரு பட்டது.

சரோஜாவோ வழக்கம்போல் தனிமையில் மூழ்கியிருந்தாள். இதயச்சந்திரன் தன்னைத் த்யார்படுத்திவனாக அவளருகில் சென்று " சரோஜா" என்றழைத்தான்.

அவனது அழைப்பின் வெறுபாட்டை உடனேயே சரோஜாவின் பெண்ணுள்ளம் புரிந்து கொண்டது. 'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனே தொடர்ந்தான்: "கெதியிலை வெளியிலை போகலாம் போலக் கிடக்குது. அதுதான் அதைப்பற்றிக் கதைக்கலாமெயென்று பட்டது. அதுதான் உங்களுக்கும் நேரமிருக்குமென்றால் , கொஞ்சநேரம் என்னுடன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக் கலந்தாலொசிக்க முடியுமே?"

அதற்கவள் பதில் அவளது மனநிலையினை மிகவும் துல்லியமாகவே வெளிப்படுத்தியது.

"எல்லாமே முடிந்து விட்டதே."

"என்ன சொல்லுகிறீர்கள் சரோஜா?"

"சொல்ல என்ன இருக்கு. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிஞ்சு போயிற்று. "

இவ்விதம் சரோஜா கூறவே, இதயச்சந்திரன் இடை மறித்தான்: " சரோஜா. நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி. ஆனந்தனைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள். அவனுக்காகவாவது நாங்களேதாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும்தானே.. "

இதற்கு அவள் மெளனமாகவிருந்தாள். அவனே தொடர்ந்துக் கூறினான்: "சரோஜா. நான் நல்லாய் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன். இன்னும் கொஞ்ச நாளிலை எங்களையும் இந்த முகாமிலிருந்து வெளியிலை அனுப்பி விடுவாங்கள். வெளியிலை போனவங்களிலை பலருக்கு இன்னும் குறைஞ்ச அளவு வசதிகள் தானும் செய்து கொடுக்க வில்லையாமே... இப்படியான சூழலிலை நீங்களும் , ஆனந்தனும் தனியே இருந்தால் என்ன நடக்குமென்றதை நினைச்சுப் பார்த்தாலே பயமாயிருக்கு. அதனால்தான் நான் கடைசியிலை இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்.."

"நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' சரோஜாதான் கேட்டாள்.

இதற்குச் சிறிது யோசித்துவிட்டு இதயச்சந்திரனே கூறினான்: "சரோஜா. நாங்கள் மூவரும் வெளியிலை போன பிறகும் ஒன்றாகவே வசித்தால் அதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியிது. நான் உயிரோடை இருக்கிற வரையில் என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கும், ஆனந்தனுக்கும் செய்வன். உங்களை அன்றைக்கு அந்தப் போர் சூழலிலை பார்த்த அந்தக் கணத்திலேயே எனக்குள் சொல்லிக் கொண்டேன் இந்தப் பெண்ணை எப்படியும் , என்னாலை முடிஞ்ச் அளவுக்குக் காப்பாத்துவேன். நான் ஒன்றாக இருப்போம் என்று சொன்னதும் தவறாக ஒன்றும் நினைச்சு விடாதீங்கள். இருவரும் ஆனந்தனுக்கு அவனது அப்பா, அம்மா இருந்தால் என்ன செய்வாங்களோ அப்படியே எதவிதக் குறையுமில்லாமல் எங்களால் முடிஞ்சதைச் செய்ய வேண்டும். அதுக்காக நாங்களிருவரும் புருசன், பெண்டாட்டியாகத்தான் இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. அப்படி வாழக் கிடைச்சால் அதை நான் மறுக்க மாட்டன். ஆனால் அதுவல்ல என் இப்போதைய விருப்பம். நாங்கள் மூவருமே இந்தப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறம். மனுசங்க என்ர
அடிப்படையில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டுமென்றுதான் நினைக்கிறன். நீங்கள் இப்பவே இதுக்கான பதிலைச் சொல்ல வேண்டுமென்றில்லை. நல்லா யோசித்து, ஆற , அமர யோசித்துச் சொன்னால் போதும். இந்த முகானை விட்டு போறதுக்குள்ளை சொன்னால் அது போதும். நீங்கள் நல்ல பதிலைச் சொல்லுவீங்களென்று நினைக்கிறன்"

இவ்விதம் கூறிவிட்டு, சரோஜாவைத் தனிமையில் விட்டுவிட்டு, குடிசையின் வெளியே வந்தான் இதயச்சந்திரன். முதன் முறையாக எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைக் கீற்றொன்று சிந்தையில் தோன்றி மறைந்தது. முடிவு கூடத் தன்னுள் தொடக்கமொன்றினை எவ்விதம் மறைத்து வைத்துள்ளது.

போர்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் பூவுலகுதான் எவ்விதம் ஆனந்தமாக விளங்கும். எந்தவித இன,மத, சாதி வேறுபாடுகளற்று, இந்தப் பூமிப்பந்தின் மானுடர்கள அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகளாக வாழ்ந்திருக்கும் சாத்தியம் ஏற்பட்டால் எவ்விதம் இன்பமாகவிருக்கும்.

போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!
போரே ! போய் விடு!

ngiri2704@rogers.com

சிறகும், உறவும்! - வ.ந.கிரிதரன் -



1.

மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான ஊடலிது. ஊடலுக்குப் பின் கூடுவதிலுள்ள இன்பம் பற்றிப் பல சங்கக் கவிதைகள் விபரித்துள்ளன. ஆனால் கூடலே ஊடலுக்கான காரணம் பற்றி ஏதாவது சங்கப் பாடல் உள்ளதா? இத்தனைக்கும் வசுந்தரா அவனது தாலி கட்டிய மனைவி. அவனைத் துரத்தித் துரத்தி ஒற்றைக்காலில் நின்று காதலித்து மணம் முடித்த துணைவி.

அவன் சலிப்புற்றிருக்கும் நேரங்களீலெல்லாம தன் பார்வையால், சொல்லால், மயக்கும் கண்களால், புன்னைகையால், அரவணைப்பால் அவன் சலிப்பைப் போக்கும் கலையில் வல்லவள். அவளா இப்படி மாறிப் போனாள் என்று சிந்தனையிலாழ்ந்தான் மாதவன். திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளேன் இவ்விதம் மாறி விட்டாளென்பது அவனுக்குப் புரியாத புதிராகவிருந்தது. அவனது மனதில் அண்மைக் காலத்துச் சம்பவங்களின் தொகுப்பொன்று ஓடி மறைந்தது.

எப்பொழுதுமே கலகலப்பாகவிருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அண்மைக்காலமாகவே ஒரு சிறு மாற்றம். அடிக்கடி தன்பாட்டில் சிந்தனையில் ஆழ்ந்து போய் விடுவாள். அவனுக்கு அது ஒரு வித ஆச்சரியத்தையே தந்தது.

"என்ன வசந்தி! உமக்கேதாவது பிரச்சினையா? கொஞ்சக் காலமாகவே நானும்தான் பார்க்கிறன் .. நீர் ந்ல்லாத்தான் மாறிப் போட்டீர்.. என்ன பிரச்சினையென்றாலும் என்னட்டை மனதைத் திறந்து சொல்லலாம்தானே"

அதற்கு அவள் ஒன்றுமே பதில் கூறாமல் மெளனமாகவிருந்தாள். அவன்தான் மீண்டும் கேட்டான்: "என்ன வசந்தி. நான் பேசுறது காதிலை விழுகுதா?"

அதற்கும் அவள் பதிலெதனையும் கூறாமல் மெளனமே சாதித்தாள். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த யோசனை வந்தது. அவன் சலிப்பாகவிருக்கும் சமயங்களிலெல்லாம் அவள் எத்தகைய தந்திரங்களைச் செய்து அவனை மாற்றிவிடுவாளோ, அதே மாதிரியான தந்திரங்களை வைத்து அவளையும் மாற்றிவிடவேண்டுமென்று அவன் முடிவு செய்தது அப்பொழுதுதான். கூடலில் இருக்கும் இன்பமே தனி. கூடலுக்கு மயங்காத உயிரினம்தானேது.

மெதுவாக வசுந்தராவின் பின்புறமாகச் சென்றவன் அவளை அப்படியே தன் மார்புடன் வாரித்தழுவ முயன்றான். அடுத்து நடந்த நிகழ்வுகள் அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கூடவே தந்தன. அவன் அவ்விதம் பின்புறமாக வந்து அணைப்பதை எதிர்பார்க்காத வசுந்தரா அன்னியனொருவன் அணைக்க வந்தால் எவ்விதம் எதிர்த்துப் போராடுவாளோ அவ்விதமே அவனைத் தன் பலமனைத்தையும் ஒன்றாக்கிப் பிடித்துத் தள்ளி, அவன் அனைப்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

மாதவன் ஒரு கணம் அதிர்ந்தே போனான். அக்கணத்தில் அவள் தன்னையொரு வேற்று மனிதனாகவேக் கருதி நடந்து கொண்டதாக உணர்ந்தான்.

அதுவே அவனது அதிர்ச்சியின் காரணம். 'இவளுக்கென்ன நடந்து போச்சுது. ஒரு வ்ருசமாய்க் குழந்தை, குட்டியென்று ஒன்றும்
கிடைக்காமலிருக்கிறதாலை ஏதாவது விரக்தி, கிரக்தி அல்லது மன அழுத்தமென்று ஏதாவது மன வியாதி இவளைப் பிடித்தாட்டுகிறதோ?.' அதே சமயம் தன்னை அவள் அவ்விதம் அன்னியனைப் போல் தள்ளியதாலேற்பட்ட ஒருவித சோகம் அவனைப் பிடித்து வாட்டத் தொடங்கியது. அந்த வாட்டத்திற்குரிய சோகமும், அவளது நடத்தையால் ஏற்பட்ட அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து தாக்கவே, அவன் அவளத் தன் அணைப்பினிலிருந்து விலக்கினான். தன்னை உயிருக்கு உயிராய் காதலித்து மணந்த துணைவி அவள். அவள் இப்பொழுது தன்னை அன்னியன் ஒருவனைப் போல் நடத்துகின்றாளே. அந்தப் புறக்கணிப்பு அவனுக்கு ஒருவித வேதனையைத் தந்தது.

அத்துடன் ' ஐ ஆம் சொறி' என்றான்.

இவ்விதம் தான் கூறியதும் ,அவளேதாவது மன்னிப்பு கேட்பாளென்று எண்ணிய மாதவனுக்கு , அவள் அப்படியெதுவும் கேட்காமல், தவறு செய்தது அவன்தான் என்பது போலவும், அவனது மன்னிப்பு போதுமானதல்ல என்பது போலவுமொரு நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றது மேலும் அதிர்ச்சியையே தந்தது. அவளாகவே திரும்பி வந்தால் மட்டுமே இனி கதைப்பது என்று விரைவாகவே தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுது அவனை வசுந்தராவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணங்கள் என்னவாகவிருக்கும் என்பதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமிக்கத் தொடங்கின.

2.

வசுந்தரா வேலையிலிருந்து வரும்போது மணி மாலை ஏழை நெருங்கி விடும். அவர்கள் வசிப்பது ஸ்கார்பரோவில். அவள் வேலை பார்க்கும் வங்கி இருப்பது டொராண்டோ நகரின் மேற்குப் புறத்தின் எல்லையில் ரோயல் யோர்க் வீதியும், புளோர் வீதியும் சந்திக்கும் இடத்திற்கண்மையில். வேலை முடிந்து பாதாள் இரயிலேறி , 'ரபிட் ட்ரான்சிட்', பஸ்களென மாறி மாறி ஏறி இறங்கி வரவேண்டும். இந்த விடயத்தில் அவன் கொடுத்து வைத்தவன்.

அவன் தகவல் தொழில் நுட்ப நிபுணனாக, ஒப்பந்த அடிப்படையில், அத்துறையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர்களினூடு சுய தொழில் செய்து கொண்டிருந்தான். அடிக்கடி பணி புரியும் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருந்தாலும், அதனைத்தான் அவனும் விரும்பினான், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் அதிக அளவில் தொழில் நுட்ப அனுபவங்களைப் பெறக் கூடியதாகவிருந்தது. அனுபவங்களுக்கேற்ப ஒவ்வொரு முறையும் ஊதியத்தையும் அவனால் அதிகரிக்க முடிந்தது. 'வெப் சேர்வர்' நிர்வகிப்பதில், அதற்குரிய 'அப்ளிகேசன்களை' நிறுவுதற்குரிய 'சேர்வர்'களை உருவாக்கி, 'அப்ளிகேசன்களை' நிறுவுவது .. இவைதான் அவனது முக்கியமான தொழில். மைக்ரோசாவ்ட்டை மையமாகக் கொண்டு அந்நிறுவனத்தால் உருவாக்கப்படும் மென்பொருள்களைப் பாவித்து மேற்படி சேவைகளை ஆரம்பத்தில் வழங்கியவன் ஒப்பந்த அடிப்படையில் மேலும் பல நிறுவனங்களில் பணி புரிந்ததன்வாயிலாக இன்று லினிக்ஸ்/பிஎச்பி/மை எஸ்குயூஎல், ஐபிஎம் எ.ஐ.எக்ஸ் யுனிக்ஸ்/ வெப் ஸ்பெயர் அப்ளிகேஷன் சேர்வர் எனத் தன் அறிவாற்றலையும், அனுபவத்தையும் வளர்த்தெடுத்திருந்தான். இணையமும் அது பற்றிய பல்வேறு தொழில் நுட்பங்களும் அவனை மிகவும் கவர்ந்தவை. இதனால் அவன் தன் பணியினை மிகவும் இரசித்து, விரும்பி, ஆற்றினான். தற்போது அவன் பணி புரியும் நிறுவனம் அவர்களது
இருப்பிடத்திற்கண்மையில்தானிருந்தது. இதனால் நேரத்துடனேயே அவன் வீடு திரும்பிவிடுவான்.

அன்றும் அவ்விதமே திரும்பியவன் வீட்டின் பின் வளவில் பிளாஸ்டிக் கதிரையொன்றைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டமர்ந்தபடியே சிந்தனையிலாழ்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. அவனது சிந்தனை முழுவதையும் வசுந்தராவே ஆக்கிரமித்திருந்தாள். இந்தப் பிரச்சினைக்கொரு முடிவு கட்டினால் நல்லதென்று பட்டது. இவ்விதமே இருவரும் அண்மைய மாற்றங்களுக்கென்ன காரணமென்பது தெரியாமல் , ஒருவிதமான ஒட்டாத வாழ்க்கை வாழ்வதிலும், ஆற அமர யோசித்து, பிரச்சினைகளைப் பற்றி மனந்திறந்து கதைப்பதன் மூலம்தான் தற்போது நிலவும் இறுக்கமான சூழலுக்கொரு தீர்விருக்க முடியுமென்று பட்டது. அவ்விதம் நினைத்ததுமே மனதிலொரு ஆறுதலேற்பட்டது. அது வரையில் வசுந்தரா பற்றிய எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தவனின் கவனம் அதன்பின்பே சுற்றியிருந்த அந்திச் சூழலின்மேல் திரும்பியது.

சிவந்திருந்த அந்தி வான் எப்பொழுதுமே அவனைக் கவருமொரு நிகழ்வு. பொதுவாக விரிந்திருக்கும் நீலவான், சுடர் கொழிக்கும் இரவு வான், முகில் மூடி அவ்வப்போது உறுமும் கார்காலத்துக் கருவான்.. இவ்விதம் விரிந்திருக்கும் வானின் பல்வேறு வடிவங்களும், நிகழ்வுகளும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. இயற்கையை எவ்வளவு இரசித்தாலும் அலுப்பதில்லை. இயற்கையின், படைப்பின் நேர்த்தி மிக்க அழகு எப்போழுதுமே அவனது தாகமெடுத்தலையும் சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை மிக்கது. அவனது பால்யகாலத்தில் காடுமேடென்று அலைந்து திரிவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. அதிலும் கொட்டும் மழை அவனை மிகவும் கவர்ந்ததொரு இயற்கை நிகழ்வு. இரவு முழுக்க , ஓட்டுக் கூரை சடசடக்கக் கொட்டும் மழையையும், கூடவே அருகிலிருக்கும் வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக் கச்சேரிகளையும் கேட்பதைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமுண்டோ?

இவ்விதமே அன்றும் அந்தியின் அழகில் மெய்மறந்திருந்த அவனைக் கண்டதும் படையெடுக்கும் மாடப்புறாக்கள் சில தற்பொழுதும் அவனைக் கண்டதும் அருகில் வந்தமர்ந்தபடி அகப்பட்டடதைக் கொறிக்க ஆரம்பித்தன. ஒவ்வொரு முறையும் அவன் புறாக்களைக் கண்டதும் அவற்றுக்குப் பாணைச் சிறு சிறு துண்டுகளாக்கிப் போடுவான். அதன் விளைவாக ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அந்தப் பட்சிகளுக்கும் அவனுக்குமிடையில் ஒருவிதமான உறவும் , பிணைப்பும் ஏற்பட்டிருந்தன. அவற்றின் விளைவாக அந்தப் புறாக்கள் அவன்மேல் எந்தவிதமான ஐயமும், அச்சமும் கொள்வதில்லை. அவனை தங்களது நம்பிக்கைக்குரியதொரு உயிரினமாக அவை கருதின போலும். மாதவன் வீட்டினுள் சென்று கிடந்த பாணொன்றை எடுத்துக்கொண்டு வந்து சிறு சிறு துண்டுகளாக்கி புறாக்களை நோக்கி வீசினான். அவையும் மிகவும் உற்சாகத்துடன் தீனியைத் தேடிக் கொறிக்க ஆரம்பித்தன.

அவனது கவனம் அவற்றின்பால் திரும்பியது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கவனிக்க ஆரம்பித்தவனின் கவனத்தை அவற்றின் நடத்தை மிகவும் கவர்ந்து விடவே மனமொன்றிக் கவனிக்க ஆரம்பித்தான். அத்துடன் உள்ளே சென்று மேலுமொரு பாணொன்றைப் பிய்த்தெடுத்துவந்து சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றிற்கிட்டான்.

ஆரம்பத்தில் உண்பதில் கவனத்தைப் பதித்திருந்த ஆண் புறாவொன்றின் கவனம் , அதன் வயிற்றுப் பசி ஓரளவுக்குத் தணிந்ததும், வேறு திசையில் ப்யணிக்க ஆரம்பித்தது. அவற்றிலிருந்த ஆண் புறாவின் அங்க சேட்டைகள் மாதவனுக்கு ஒருவித சிரிப்பையும், இன்பத்தையும் முடிவில் ஆச்சரியத்தையும் தந்தன. தனது வாலைச் சிறிது விரித்து, தரையுடன் தேய்த்தபடி, கழுத்துப்புறத்துச் சிறகுகளைச் சிலிர்த்தபடி, கழுத்தை மேலும் கீழுமாக விரைவாக மேலும் கீழும் அசைத்தபடி அந்த ஆண் புறா அருகில் உண்பதில் கவனமாயிருந்த பெண் புறாவின் கவனத்தைக் கவர முயன்றது. துணையுடன் கூடுவதற்காக அது செய்த தந்திரமும், அதன் ஒரு விதமான நடன அசைவும் அவனை மேலும் கவரவே அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாதவன். ஒவ்வொரு முறையும் ஆண் புறாவின் முயற்சியினை அந்தப் பெண் புறா கவனித்ததாகத் தெரியவில்லை. அலட்சியம் செய்தபடியே தன் பாட்டில் விலகி, விலகிச் சென்றபடியே தன் கவனத்தை ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணவுத் துணிக்கைகளைத் தேடி உண்பதில் கவனமாகவிருந்தது. அவனுக்கு அந்த ஆண் புறாவின் மேல் ஒருவித பரிவு கலந்த உணர்வு ஏற்பட்டது. அதே அதன் முயற்சிகளை அலட்சியம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண் புறாவின்மேல் சிறிது ஆத்திரமாகக் கூட வந்தது. 'என்ன பெண்ணிது... கொஞ்சம் கூடத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமுடியாமல்... சரியான அகங்காரம் பிடித்த பெண்ணாகவிருக்க வேண்டும்' இவ்விதம் தனக்குள்ளாகவே அவன் கூறிக்கொள்ளவும் செய்தான்.

ஆனால் அந்த ஆண் புறா தனது பெண் துணையின் புறக்கணிப்பைப் பற்றியும் சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை. விடாமல் , சலிக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டேயிருந்தது. அப்பொழுது அவனுக்கு அவனது பால்ய காலத்து நினைவொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது அம்மா எப்பொழுதுமே வீட்டில் கோழி வளர்க்கத் தவறியதேயில்லை. அப்பொழுதெல்லாம் முற்றத்தில் அடிக்கடி பெட்டைக் கோழிகளைத் துரத்தித் துரத்தித் தம் ஆண்மையினை அகங்காரத்துடன், பலவந்தமாக வெளிப்படுத்தும் சேவல்களின் ஞாபகம் இச்சமயத்தில் தோன்றியது. அவை இந்தப் புறாக்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமானவையென்று சடுதியாக பொறியாக அவன் சிந்தையில் எண்ணமொன்று ஓடி மறைந்தது. குறைந்தது பத்து தடவைகளாவது அந்த ஆண் புறா அந்தப் பெண் புறாவினைக் கவருவதற்குத் தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்திருக்கும். ஆனால் ஒருமுறை கூட தன் துணையின் அலட்சிய நடத்தைக்காக அது ஆத்திரமுற்று, சேவலைப் போல் துரத்திப் பலவந்தமாகத் தன் வேட்கையினைத் தணிக்க முயற்சி செய்யவேயில்லை என்ற விடயம் அப்பொழுதுதான் அவனது கவனத்தில் உறைத்தது. அந்த ஆண் புறாவின் மேல் மிகுந்த மதிப்பும், பெருமிதமுமேற்பட்டன.

இந்தப் பெண் புறா ஏன் தன் ஆண் கூடுவதற்கு முயன்றும் அலட்சியம் காட்டுகின்றது. எவ்வளவோ காரணங்களிருக்கக் கூடும். அதன் உளவியல், உடலியல் ரீதியிலான எத்தனையோ காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக, அதன் அலட்சியத்திற்காக அந்த ஆண் புறா தன் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளவில்லையே. எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் வசுந்தராவின் நடத்தையில் அந்தக் கலகலப்பு காணாமல் போனதென்றால் அதற்கேதாவது உளவியல், அல்லது உடலியல்ரீதியிலான காரணங்கள் இருக்கக் கூடும். அவற்றைக் கண்டறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு அவன் எப்பொழுதுதாவது முயன்றதுண்டா? அதனைவிட்டுவிட்டு, அவளுடன் பலவந்தமாகக் கூடுவதற்கு முய்னற தன் செய்கையையும், கூடுவதற்குக் கூட கண்ணியத்தைக் கடைப்பிடித்த, துணையின் மனநிலையினைக் கவனத்திலெடுத்து அதனை வற்புறுத்தாத அந்த ஆண் புறாவின் நடத்தையையும் ஒரு முறை மனது ஒப்பிட்டுப் பார்த்தது. வெட்கித்துப் போனான்.

( யாவும் கற்பனை )

மின்னஞ்சல்: ngiri2704@rogers.com

Friday, July 30, 2010

நான் அவனல்லன்! - வ.ந.கிரிதரன் -

சென்னையில் இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்' என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharn) என்னும் பெயரில் எழுதிவருகின்றேன். மேற்படி நூலினை நான் எழுதவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும் வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள் எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அல்லது எனது ஆக்கங்கள் சிலவற்றை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. மேற்படி நூலினை இதுவரையில் பார்க்காததனால் இரண்டிற்கும் சாத்தியங்களுள்ளதால், மேற்படி நூலினை வாசித்தவர்கள் யாராவதுதான் அறியத்தர வேண்டும். இங்கு நான் இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்குக் காரணமுண்டு. அது பெயர்க் குழப்பம்தான். தமிழ் இலக்கிய உலகில் என்னை அறிந்தவர்கள் பெயரைப் பார்த்ததும் நான் எழுதியதாகக் கருதிவிடுவார்கள். மணிமேகலை பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் நூல்களை வெளியிடும்போது இவ்விதம் பெயர்க் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தேவையற்ற பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும் மணிமேகலை பிரசுரத்தினர் மேற்படி பெயரில் மேலும் எத்தனை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. நான் எனது நூல் எதனையும் மணிமேகலை பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறியத்தருகின்றேன். ஒரு பதிவுக்காகவும், விளக்கத்திற்காகவும் இதனை அறிவிப்பது அவசியமானதென்று கருதுகின்றேன். சங்கர்லால், தமிழ்வாணன் எனத் துப்பறியும் நிபுணர்கள் நடமாடும் நாவல்களைப் படைத்த தமிழ்வாணனின் புதல்வர்கள் நடாத்தும் நிறுவனத்தால் ஏற்கனவே நீண்டகாலமாக எழுதும் என் பெயரைப் பாவித்து நூல் வெளியிடுவதில் விளையக் கூடிய தேவையற்ற குழப்பங்களை உணரமுடியாமலிருப்பது வியப்பிற்குரியது. தந்தையின் நாவல்களில் வருவதைப்போல் சிறிது துப்பறிந்திருந்தால் ஏற்கனவே மேற்படி பெயரில் ஒருவர் எழுதுவதைக் கண்டுபிடித்திருக்கலாம். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

- வ.ந.கிரிதரன் -
ngiri2704@rogers.com

********************************

இது பற்றி மணிமேகலை பதிப்பகத்தாருக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து (அவர்களது பதில் இன்னும் வரவில்லை) சில பகுதிகள்:

வணக்கம் பதிப்பகத்தாரே,
உங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட 'முத்தமிழில் நல் முத்துகள்' என்னும் நூலின் ஆசிரியர்களிலொருவராக V.N.கிரிதரன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharan) எழுதி வருகின்றேன். இவ்விதமாக நீங்கள் V.N.கிரிதரன் என்னும் பெயரைப் பாவிப்பது பெயர்க் குழப்பங்களை ஏற்படுத்துமென்பதால் எதிர்காலத்தில் கிரிதரன் போன்ற பெயர்களைப் பாவிப்பீர்களென்றால் பெயர்க்குழப்பங்களை அதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை நீங்கள் கருத்தில் கொள்வீர்களென நினைக்கின்றேன். மேலும் மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள V.N.கிரிதரன் பற்றிய மேலதிக விபரங்களைத் தந்துதவிட முடியுமா?

- வ.ந.கிரிதரன்:

எதிர்காலச் சித்தன்! _ வ.ந.கிரிதரன் -


[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"

அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"

இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.

அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன்..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:

" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். துண்டுபட்டிருக்கும்தேசங்கள், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள் .. இவை போன்ற பேதங்களெல்லாம் உனது நிகழ்கால உலகில் உள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாப் பிரிவினைகள். அவை யாவும் சாகும் எனது எதிர்கால உலகில். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற அத்தனை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."

இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"

எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: " எதிர்காலச் சித்தா! உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."

இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது."

அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.

பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே!

என்றிவர்கள் உணமை காண்பாரோ?


ngiri2704@rogers.com
மூலம்: எதிர்காலச் சித்தன் பாடல்! - அ.ந.கந்தசாமி
http://www.geotamil.com/pathivukal/poems_ank.html#ethirkalam

Friday, October 16, 2009

சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் -


நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது என்னிடமில்லை. இருந்தாலும் என் எழுத்து வாழ்க்கையில் அவற்றுக்கும் முக்கியமானதோரிடம் என்னைப் பொறுத்தவரையிலுண்டு என்பதால் அவற்றின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. என் பால்யகாலத்தில் தமிழகத்தின் வெகுஜனசஞ்சிகைகள், பத்திரிகைகளால் நிறைந்திருந்த வீட்டுச் சூழலே அந்தவயதில் என் எழுத்தார்வத்தைத் தூண்டிவிட்ட முக்கியமான காரணிகளிலொன்று. இதனால்தான் என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில், பல்வேறு காரணங்களால், பல்வேறு காலகட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக, தேவையாக இருக்கின்றன. நான் அடிக்கடி கூறுவதுபோல் ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே எழுந்து நின்று நடக்கத் தொடங்குவதில்லை. உருண்டு, தவழ்ந்து பின்னரே பலவேறு முயற்சிகளுக்குப் பின்னர் எழுந்து நின்று சிரிக்கத் தொடங்குகிறது. எழுந்த எடுப்பிலேயே எல்லோரும் ஞானசம்பந்தரைப் போல் மூன்று வயதிலேயே உமையம்மையின் முலைப்பாலுண்டு ஞானம்பெற்று கவி புனையத் தொடங்கிவிடுவதில்லை. ஒரு படைப்பாளியோ அல்லது இலக்கிய ஆர்வலரோ படிப்படியாகத்தான் வளர்ச்சி பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் அல்லது பத்திரிகைகளின் பாலர் மலர்களில் தொடங்கிப் பின்னர் படிப்படியாக வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகளினூடு வளர்ந்து பின்னர் மெல்ல மெல்ல தி.ஜா. , புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன் என்று தங்களது இலக்கியப் படைப்புகளினூடான வளர்ச்சியைப் படிப்படியாக அடைகின்றார்கள். அதனால்தான் என்னைப்பொறுத்தவரையில் இத்தகைய வெகுசனப் படைப்புகளும் இலக்கியத்தின் முக்கியமானதோர் பகுதியாக விளங்குகின்றன. எல்லாப் பிரபலமான, தரமான படைப்பாளிகள் எல்லோருமே தததமது வாழ்க்கையில் வெகுசன இலக்கியப் படைப்புகளினூடுதான் வளர்ந்து வந்திருப்பார்கள். அவர்கள் பலரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் சுயசரிதைகள் பலவற்றின் வாசிப்பு இதனைத்தான் உறுதி செய்கின்றன. ஒரு இலக்கிய ஆர்வலரின் அல்லது படைப்பாளியின் வாசிப்பானது பலவேறு படிகளினூடாகப் பரிணாம வளர்ச்சிபெற்று வருவதுதான் இயற்கை. அது அம்மா அம்புலிமாமா காட்டி பற்சோறு ஊட்டுவதிலிருந்து தொடங்கி, பாலர் கதைகள், வெகுசன இலக்கியப் படைப்புகளென்று தொடங்கிப் பின்னர் படிப்படியாக காப்கா, உம்பத்தே ஈகோவென்று விரிவடைகின்றது. அதற்காக எல்லோருடைய வாசிப்புமே இவ்விதமாக முழுமையாக பரிணாம வளச்சியடைந்து விடுகின்றது என்பதில்லை. ஆனாலும் பலவேறு தரப்பினரின் வாசித்தலுக்கும் ஏதோவொரு வகையான இலக்கியப் போக்கின் தேவை எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றது.

ஹா! ஹா! ஹா!என் பாலயப் பருவத்தில் என் அப்பாவும் அம்மாவும் அவ்வப்போது ஆனந்தவிகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். குறிப்பாக ஆனந்தவிகடனில் அன்றைய காலகட்டத்தில் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள், முழுநாவல்கள் முத்திரைக் கதைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன', 'கோகிலா என்ன செயுது விட்டாள்?', 'யாருகாக அழுதான்?', 'உன்னைபோல் ஒருவன்', 'அக்கினிப் பிரவேசம்' இவ்விதம் பல படைப்புகள அன்றைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற நாவல்களை விகடனும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்களைத் தினமணிக் கதிரும் வெளியிட்டிருந்த காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் அதுவரையில் மூன்று பாகங்களுடன் வெளியாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளின் நீளம் ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அறுபதுகளில் வெளியாகும் பெரும்பாலான வெகுசன சஞ்சிகைகளில் நிச்சயமாக மூன்று பாகங்களுக்குக் குறையாமல் தொடர்கதைகள் வெளியாவதில்லை. நான் கூறவந்ததென்னவென்றால் இவ்விதமாக வெகுசன சஞ்சிகைகளும், படைப்புகளும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டமொன்றில்தான் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்; எழுதத் தொடங்கியிருந்தேன். வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை வாராவாரம் காத்திருந்து மக்கள் வாசித்தார்கள். ஓவ்வொரு சஞ்சிகையும் போட்டி போட்டுக் கொண்டு பிரபல எழுத்தாளர்களின் தொடர்கதைகளைப் பாகங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டமது. நா.பா, ஜெகசிற்பியன், அகிலன், சாண்டிலயன் போன்றோரது தொடர்கதைகள் பெரும்பாலும் மூன்று பாகங்களில் வெளியான காலமது. அவ்விதமானதொரு சூழலின் பாதிப்பால் அன்றைய காலகட்டத்தில் என் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களில் பல தொடர்கதைகளை எழுதிக் குவித்தேன். அவற்றிலொன்று 'மறக்க முடியுமா?'. அதைவிட இன்னும் பல குறுநாவல்கள். அவற்றிலொன்று: 'மழைப் பெய்து ஓய்ந்தது'. இவற்றின் முழுக் கதையும் தற்போது ஞாபகத்திலில்லை. இருந்தாலும் 'மழை பெய்து ஓய்ந்தது'. என்னுக் கதையின் ஆரம்பமும், முடிவும் மட்டும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அந்தக் கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் மிகவும் பலமாக 'ஹா ஹா ஹா'வென்று குரலெடுத்துச் சிரிப்பான். ம்ழை பெய்யத் தொடங்கியிருக்கும். அதுவொரு மர்மக் கதை. கதையின் இறுதியில் சிக்கல் அவிழ்ந்து, மழையும் பெய்து ஓய்ந்திருக்கும். கதாநாயகன் மீண்டும் பலமாகக் 'ஹா ஹா ஹா'வென்று சிரிப்பதுடன் கதை முடிந்திருக்கும். அதனைப் படித்துவிட்டு அப்பா பலமாகக் 'ஹா ஹா'வென்றுச் சிரித்தார். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அடுத்தவீட்டு மாமியும் அன்றைய என் வாசகர்களிலொருவர். என் கதைகளை வாசித்துவிட்டுக் குறிப்பாக அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதையினைப் படித்துவிட்டு பலமாகக் 'ஹா ஹா'வென்று சிரித்தபடியே வந்து பாராட்டுத் தெரிவித்தார். நல்லவேளை, அந்த 'மழை பெய்து ஓய்ந்தது' கதை தற்போது என்னிடமில்லை. இருந்திருந்தால் அதனைப் படித்துவிட்டு நீங்களனைவரும்கூடக் 'ஹா ஹா ஹா'வென்று கல்கியின் ரவிதாசன் பாணியில் சிரித்துச் சிரித்தே வயிறுகள் புண்ணாகியிருப்பீர்கள். நல்லவேளை தப்பித்தீர்கள்.

சித்தி வீட்டில் கொண்டாடிய சித்திரையும், ஈழநாடும்......அவ்விதமாக ஆரம்பத்தில் நாவல்கள் சிலவற்றை எழுதிய நான் அதன் பின்னர் கவிதைகள் சில எழுதுவதில் ஆர்வத்தைச் செலுத்தினேன். தமிழகச் சஞ்சிகைகளில் வெளியான தீபாவளிக் கவிதைகளின் பாதிப்பில் ஓர் அறுசீர் விருத்தமொன்றினை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் சித்திரைச் சிறப்பிதழுக்காக என் அப்பாவின் பெயரில் எழுதி அனுப்பினேன் (ஆனால் இதற்கு முன்னர் என் பெயரில் பொங்கல் கவிதையொன்றை சுதந்திரன் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அது ஒரு சிறுவர் கவிதை. அதுவே அச்சில் வெளியான எனது முதலாவது கவிதை). அன்றைய காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. இருந்தாலும் அப்பாணியில் அமைந்திருந்த ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்த கவிதைகளின் பாணியில் (குறிப்பாகத் தமிழக வெகுசன இதழ்களின் தீபாவளி மலர்களில் வெளியான கவிதைகளின் பாணியில்) எழுதி அனுப்பியிருந்தேன். சித்தி வீட்டுக்குச் சித்திரைத் திருநாளன்று செல்வது பற்றி எழுதியிருந்தது ஞாபகத்திலுள்ளது. அதனை ஈழநாடும் நான் எதிர்பார்க்காமலேயே பிரசுரித்தும் விட்டது. அப்பாவும் மகிழ்ச்சியடையக் கூடுமென்று அதனைக் காட்டி அப்பாவிடமிருந்து திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதே சமயம் ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் கவிதைகள், கட்டுரைகளென அவ்வப்போது எழுதத் தொடங்கியிருந்தேன். 'ஆசிரியர்', 'வான்மதி' போன்ற கவிதைகள் சில ஈழநாடு வாரமலரின் மாணவர் மலரில் வெளியாகியிருந்தன (பின்னர் வீரகேசரி, தினகரன், சிந்தாம்ணி, ஈழமணி போன்ற பத்திரிகைகள் புதுக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கத் தொடங்கியபொழுது அவ்ற்றில் சுமார் நூறு வரையிலான கவிதைகளை எழுதியிருப்பேன். அக்காலகட்டத்தில் புதுக்கவிதைகளை வீரகேசரி உரைவீச்சு என்னும் தலைப்பில் பிரசுரித்து வந்தது. சிரித்திரனும் நடத்தியதொரு கவிதைப் போட்டியில் "புது'மை'ப்பெண்" என்று எழுதிய சிறு கவிதையொன்று பாராட்டுக் கவிதைகளிலொன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.) உண்மையில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலர் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதோர் விடயம். என் ஆரம்பகால எழுத்துலகின் பல்வேறு காலகட்டங்களில் ஈழநாடு களமமைத்துக் கொடுத்து ஊக்குவித்திருந்தது மிகவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஆரம்ப்த்தில் மாணவர் மலரில் என் படைப்புகளைப் பிரசுரித்த ஈழநாடு பின்னர் எனது பதினமப் பிராயத்தில் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்து ஊக்குவித்திருந்தது. உருவகக் கதையொன்றும் 'நியதி' என்னும் பெயரில் ஈழநாடு பிரசுரித்தது. (அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத சஞ்சிகையும் எனது மாணவர்காலப் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்தது. அப்பொழுது நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இது தவிர சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' என்னும் சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் கதையொன்று வெளியானது. சிரித்திரனிலும் ஒரு சில சிறுவர் கவிதைகள் வெளியாகியதாக ஞாபகம்). 'மணல் வீடுகள்', 'இப்படியும் ஒரு பெண்', 'அஞ்சலை என்னை மன்னித்துவிடு'... போன்ற சிறுகதைகள் சில திரு. பெருமாளை வாரமலர் ஆசிர்யராகக் கொண்டு வெளிவந்த ஈழநாடு வாரமலர் பிரசுரித்திருந்தது. (தினகரனிலும் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்னுமொரு எனது இச்சிறுகதை பிரசுரமாகியிருந்தது இச்சமயத்தில் நினைவு கூர்கின்றேன்.) பின்னர் எனது பல்கலைக்கழகக் காலகட்டத்தில் 'நல்லூர் இராஜதானி', மற்றும் யாழ்நகரில் காணப்பட்ட பழமையின் சின்னங்கள் பலவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி நான் எழுதிய சில கட்டுரைகளையும் பிரசுரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுடன் ஒரு சில நாட்கள் யாழ்நகர முழுவது மேற்படி சின்னங்களைப் பார்க்கத் திரிந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. எந்நேரமும் வாய்க்கு வாய் 'ராசா' , 'தம்பி' என்று அழைத்து உரையாடலினைத் தொடர்வது அன்றைய காலத்தில் அவரது வழக்கமாயிருந்தது. இந்த வகையில் அப்பொழுது யாழ் பழைய சந்தையிலிருந்த கங்கா சத்திரம்' பற்றி 'பழமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் பற்றிய' எனது ஈழநாடுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்து சிறிது காலத்திலேயே அந்தக் 'கங்கா சத்திரம்' யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்கலின் பின்னர் கவிஞர் ஜெயபாலனை தொராண்டோவில் சந்தித்தபொழுது அதனை மறக்காமல் குறிப்பிட்டபோது ஆச்சரியமடைந்தேன். இன்னும் அக்காலகட்டத்தை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாரே என்பதை எண்ணுகையில் மகிழ்ச்சியாகவிருந்தது.

நான் ஈழநாடு பத்திரிகையினூடு வளர்ந்த எழுத்தாளனென்று கூறிகொள்வதில் மகிழ்ச்சியைடைகின்றேன். அண்மையில் மல்லிகையின் 43வது மலரில் ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களிலொருவரான செங்கை ஆழியான் ஈழநாட்டுக் கதைகள் பற்றி எழுதியிருந்த ஆய்வுக கட்டுரையில் ஈழநாட்டுப் பத்திரிகையின் படைப்பாளிகளை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாகப் பிரித்து என்னை ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகளொருவராகக் குறிப்பிட்டு எனது கதைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. யாருமே ஈழநாட்டுப் படைப்புகளை மறந்துவிடவில்லையென்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழநாடு பத்திரிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையென்ற பெருமையும் அதற்குண்டு. அதன் காரணமாகவே பல தடவைகள் அந்நிறுவனம் எரிக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய சம்பவங்களிலொன்றல்ல.

சிரித்திரன் பெற்றுத் தந்த வாசகி....
எனது பதின்ம வயதுப் பருவத்தில் என்னை ஊக்குவித்த இன்னுமொரு சஞ்சிகை சிரித்திரன். சிரித்திரனில்தான் எனது முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. 'சலனங்கள்' என்னும் அச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை நடாத்திய அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பெற்ற கதைகளிலொன்றாக வெளியாகியிருந்தது. அந்தக் கதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியரின் தொடர்பு கிட்டியது. சிரித்திரன் ஆசிரியரின் மகனான ஜீவகன் அப்பொழுது யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிந்தார். என்னிலும் சில வயதுகள் மூத்தவர். அவர் மூலம்தான் நான் தான் அச்சிறுகதையினை எழுத்தியவனென்ற விடயம் சிரித்திரன் ஆசிரியருக்குத் தெரிந்தது. அதன் பிறகு நான் இலங்கையில் இருந்த காலம் வரையில் பல, தடவைகள் சிரித்திரன் ஆசிரியரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மேற்படி சிறுகதை எனக்கு இன்னுமொரு வாசகரையும் அறிமுகப்படுத்தி வைத்தது. உண்மையில் அவர் ஒரு வாசகி. அவர்தான் பிரபல யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முதல்வராகவிருந்த செல்வி இராமநாதன். அவர் என் அம்மாவின் பாட்சாலைத் தோழிகளிலொருவர். அச்சிறுகதை மூலம் என் வாசகர்களொலொருவராக மாறியவர். அன்றிலிருந்து பல தடவைகள் என் எழுத்து முயற்சிகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து ஊக்கியவர். என் அம்மாவுடன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல தடவைகள் அவர் ஈழநாடு, சிரித்திரனில் வெளிவந்த ஒரு சில படைப்புகளைப் பற்றி ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி ஊக்குவித்தவர். ஒரு முறை நானும் , என் நண்பர்களிலொருவனான அநபாயனும் அவரைச் சென்று அவரது விட்டிலேயே சந்தித்திருந்தோம். அப்பொழுதும் அவர் என் எழுத்து முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். வயதில் முதிர்ந்தவரான அவர் அன்று பாடசாலை மாணவனாக்விருந்த என் ஆரம்பகாலத்துப் படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுத்து பாராட்டியது உண்மையில் எவ்வளவு ஆரோக்கியமானவிடயமென்பது இப்பொழுது விளங்குகின்றது.

மனையடி சாத்திரமும் , மண்ணின் மாண்பும்!சிரித்திரன் ஆசிரியரைப் பொறுத்தவரையில் இறுதியாக நான் சந்தித்தது கே.கே.எஸ். வீதியில் அவர் புது வீடு கட்டிய காலகட்டத்தில். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக கழகத்தின் கட்டடக்கலை மாணவனாக இருந்த சமயம். ஒரு காலத்தில் கட்டடக்கலை மாணவனாகயிருந்தவர் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள். அன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்த வீட்டினைச் சுற்றிக் காட்டிய ஆசிரியர் , வீட்டின் அமைப்பு தன் துணைவியாரின் தூண்டுதலில் மனையடி சாத்திரத்திற்கேற்ப பல மாறுதல்களை அடையவேண்டியிருந்தது பற்றிச் சிரித்தவாறே கூறியதும் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் 'மண்ணின் மாண்பு' என்னுமொரு நாவலை எழுதிச் சிரித்திரன் ஆசிரியரிடம் கொடுத்திருந்தேன். அது கிழக்கிலங்கையின் கடற்கரைக்கிராமமொன்று எவ்விதம் உல்லாசப் பிரயாணிகளின் வருகையால் சீரழிகின்றது என்பது பற்றியது. அவ்விதமாக அங்குள்ள உல்லாசப் பயணிகளின் விடுதியொன்றில் பணியாற்றும் உள்ளூர்ப் பெண்ணொருத்தி எவ்விதம் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறுகின்றாள் என்பது பற்றியும், பின்னர் எவ்விதம் அவளது கணவனை அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றானென்பது பற்றியும் கூறும் நாவலது. அக்கடற்கரைக் கிராமத்து மக்களின் அமைதியான வாழ்வினை எவ்விதம் உல்லாசப்பயணிகளின் வரவும், அவர்களின் தன்னிச்சையான வாழ்வும் பாதிக்கின்றன் என்பது பற்றிய நாவல். அந்த நாவலை வாசிக்கக் கொடுத்திருந்தேன். ஆனால் அது சிரித்திரனிலும் பிரசுரமாகவில்லை. அதன் மூலப்பிரதி மீண்டும் எனக்குக் கிடைக்கவுமில்லை. பல மாதங்களின் பின்னர் அப்பிரதி தொலைந்து விட்டதாக ஆசிரியர் கூறினார்.

பாடும் பறவைகளும், உறவு தேடும் உள்ளமும்...இதன்பின்ன்ர் இன்னுமொரு நாவல் எழுதியிருந்தேன். அதன் பெயர் 'பறவைகள் பாடுகின்றன'. ஏனோ தெரியவில்லை அன்றைய காலத்து என் நாவல் முயற்சிகள் பலவற்றில் விதவை மறுமணம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி நாவலிலும் ஒரு விதவை மறுமணம் விபரிக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில் என் தங்கைமாரின் சிநேகிதிகள் சிலர், என் நண்பர்கள் சிலரென்று பலரின் கைகளுக்கு மேற்படி நாவல் மாறிப் பலரின் கருத்துகளையும் எனக்குப் பெற்றுத் தந்திருந்தது. இவையெல்லாம் நூலுருப் பெறவில்லையாயினும், என்னைப் பொறுத்தவரையில் அன்றைய காலகட்டத்தில் என் எழுத்தார்வததின் வடிகால்களாக விளங்கியவை அவை என்ற முக்கியத்தும் வாய்ந்தவை. இது போல் இன்னொரு நாவலும் எழுதியிருந்தேன். அதன் பிரதி இப்பொழுதும் என்னிடமுள்ளது. 'உறவு தேடும் உள்ளம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட குறுநாவல். நாற்பது பக்கங்களுக்குள் அடங்கியது. எண்பதுகளில் முழங்காவில் குடியேற்றத்திட்டத்திற்குச் சென்ற அனுபவத்தின் அடிப்படையில் பூங்குடிக் கிராமமென்ற குடியேற்றத் திட்டக் கிராமமொன்றில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் நாவல். நாவலின் கதாநாயகி எழுத்தார்வம் மிக்கவள். கணவனோ நேர்மையான விவசாயி. அவனை ஆனை அடித்துக் கொன்று விடுகிறது. நகருக்கு மேற்படிப்புக்காகச் செல்லவிருக்கும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமிடையிலான நட்பு பற்றியது நாவல். அத்துடன் குடியேற்றத் திட்ட வாசிகள் எவ்விதம் பலவேறு நபர்களால் சுரண்டப்படுகின்றார்களென்பது பற்றியும் நாவல் விபரிக்கும். முழங்காவில் அனுபவத்தில் எவ்விதம் அப்பாவிகளான அக்கிராமத்து மக்கள் அங்குள்ள சங்கககடை மனேஜர், தபாலதிபர், தொழில்நுட்பத் திட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலராலும் சுரண்டப்படுவதைக் கண்டபோது வேதனையாகவிருநதது. அந்த வேதனையின் விளைவாகவும், தமிழகத்து வெகுசன படைப்புகளின் தாக்குதல்களின் விளைவினாலும் உருவான கலவையாக உருவான நாவலிது. முற்றுப் பெறாத நாவல் பின்னர் வலிந்து முற்றுப் பெற வைக்கப்பட்டுள்ளது.

கணங்களும், குணங்களும்....இவ்விதமாக நான் நாவல்கள் சில எழுதிய போதும் அவை எதுவும் எந்தப் பத்திரிகைகளிலோ சஞ்சிகைகளிலோ வெளிவாகவில்லை. முதல்முறையாக பத்திரிகையொன்றில் வெளிவந்த நாவலென்றால் அது 'கணங்களும் , குணங்களும்' தான். மணிவாணன் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் வெளிவந்த நாவல். ( அதற்கு முன்னர் மான்ரியாலிலிருந்து வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகையான 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் 'மண்ணின் குரல்' வெளிவந்திருந்தாலும் அது கையெழுத்துச் சஞ்சிகையென்பதால் 'கணங்களும் குணங்களும்' என்பதையே அச்சு ஊடகமொன்றில் வெளிவந்த முதலாவது நாவலாகக் கருதுகின்றேன்.) நாவலைப் படிப்பவர்கள் உடனேயே எழுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த நாவல்களின் பாதிப்புகள், காண்டேகரின் கதைகளின் பாதிப்புகள் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தன் காதலியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திச் சிறைத்தண்டனை பெற்ற நாயகன் , மீண்டும் விடுதலையானதும் அவளைச் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற வேண்டி அவளிருக்கும் வவுனியாவுக்குச் செல்லுகின்றான. அவனது, அவனது காதலுக்குரியவள், மற்றும் அங்கு எதிர்ப்ப்டும் இன்னுமொரு பெண் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் கதையிது. இயற்கை வர்ணனைகள், தத்துவச் சிக்கல்கள் ஆகியன பற்றிய பல்வேறு கோணங்களில் இந்நாவலின் பாத்திரங்கள் சிந்திப்பார்கள். தமிழகத்திலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பில இந்நாவலுமுண்டு. இந்நாவலின் பெயராகக் 'கணங்களும் குணங்களும்' என்னும் பெயர் வந்ததற்கும் ஒரு காரணமுண்டு. என்னுடைய பாடசாலை நண்பர்களிலொருவன் கீதானந்தசிவம். மிகவும் ஆன்மிகத் தேடுதல் மிக்கவன். எபொபொழுதும் கேள்விக்குமேல் கேள்வியாகக் கேள்விகளைக் கேட்டே, உரையாடல்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றல் மிக்கவன். ஒரு முறை இவனுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலொன்றில் 'நல்லது, கெட்டது' ஆகியனவற்றைப் பற்றிய விவாதமொன்றெழுந்தது. சில கணங்களில் எவ்விதம் நல்லவர்கள் கூடத் தவறுகளைச் செய்து விடுகின்றார்கள் என்பது பற்றியெல்லாம் அவ்வுரையாடலில் அவன் பல்வேறு கருத்துகளை உதிர்த்தான். அப்பொழுது சில கணங்கள் எவ்விதம் சிலரது குணங்களை மாற்றித் தவறிழைக்க வைத்து விடுகிறது என்று எண்ணியதன் விளைவாக உருவானதுதான் 'கணங்களும், குணங்களும்' என்னும் தலைப்பு. இந்நாவல் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' (தமிழ்நாடு) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பில் அடங்கிய நாவல்களிலொன்று.

பொதுவாக எனக்கு எழுதுவதும், வாசிப்பதும் மூச்சு விடுவதைப் போல. அவையில்லாமல் என்னால் வாழவே முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னால் இவையிரண்டையும் விட்டு விடவே முடிந்ததில்லை. ஆனால் நான் ஒரு போதுமே யாருடைய பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எழுதுவதில்லை. எனவே எதை எழுதினாலும் அதனை நான் அனுபவித்தே எழுதுவதுண்டு. என் எழுத்தில், படைப்புகளில் பொதுவான அம்சங்களாக என் வாழ்வில் அனுபவங்களிருக்கும் அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடல்கள், இயற்கையின் மீதான என் பற்றுதல் ஆகியன ஆங்காங்கே விரவிக் கிடக்கும். உதாரணமாகக் 'கணங்களும், குணங்களும்' நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் கீழுள்ள பத்திகளைக் கவனித்தாலே போதும் மேற்படி கூற்றினை விளங்கப்படுத்த.


'வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்டப் பயணத்தை முடித்துவிட்டுப் புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக் வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாகவகமாகப் பிணைத்து விட்டது. வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழ்வும் இந்த மக்கள்.... இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன்.

சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன் முறையாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவம், ... வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக , அர்த்தமற்றவையாக அல்லவா தெனப்டுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட... வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு என்னை நினைகையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாராமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட தவறும், தணடனையும்....'

'மனது முன்னெப்போதையும்விட , மிக மிக இலேசாக , இன்பமாக, தெளிவாக , உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம், தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன், தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா, வருடிச் செல்லும் வாயுபகவான், இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.. இந்த மரம், மக்கள், மண், ... எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.

திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்... ஓங்கும் விருட்சங்கள்.. சீறும் காற்று.. உறுமியோடும் புலி முதலான விலங்குகள்... ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக, பேராறாகப் பெருக்கெடுத்து..... அலைக்கரம் கொண்டு சாடும் கடல்... இவற்றிடையே இயற்கையின் குழந்தையாக நான்.

இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும் , அலுப்பாகச் சலிப்பாகக் காணப்படும் கணங்கள் அர்த்தம் நிறைந்வையாகக் காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்கான சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது... ஆனால் இயற்கையின் குழந்தையான நீ .. இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே.. அதுவே உன் பிரச்சனைகளின் உறையுள்.. என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்...' (மண்ணின் குரல்; பக்கங்கள் 233, 234, 235 & 235)

மேற்படி 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இன்னுமொரு நாவல் 'மண்ணின் குரல்' 1984 காலப்பகுதியில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துப் பத்திரிகையில் தொடராக வெளியாகி முற்றுப் பெறாமல் நின்று போன கதை. பின்னர் கனடாவில் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சில கவிதைகள், கட்டுரைகளுடன் நூலுருப் பெற்றது. கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது நாவலென்ற பெருமை இதற்குண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவலடங்கிய நூல் அதனுடன் மேலும் சில கவிதைகளையும், அரசியற் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் தமிழகத்தில் வெளிவந்த 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்போ நான்கு நாவல்களின் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் குறிப்பாக 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பகுதிகளில் நிலவிய சூழலை மையமாக வைத்து, வர்க்க விடுதலையுடன் கூடிய தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய நாவல். தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்ட விடுதலைப் போராளிகளைப் பற்றி, இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்ணொருத்தி, விடுதலைப் போராளியொருத்தியின் காதலி, போராட்டத்தில் இணைந்தது பற்றி, பின்னர் சாதாரண இளம் வயதுக்கேயுரிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் காதலன் எவ்விதம் அவளது வழியைப் பின்பற்றிப் போராட்டத்தில் இணைந்து கொளகின்றானென்பது பற்றி விபரிக்கும் சிறிய நாவல். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட இந்நாவல் அன்றைய காலத்து என் மனதின் பிரதிபலிப்பாக விளங்கும் காலத்தின் சூழலின் விளைவாக உருவான நாவல். கருத்தினை மையமாக வைத்து உருவான இச்சிறு நாவலில் ஆங்காங்ககே தூவிக் கிடக்கும் கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம்:

'தம்பி! மனிதனால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி. பொருளும், சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், .. பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி. அச்சக்தியே இயற்கை. இயறகையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. .. மனிதனும் ஒழுங்காக இருப்பானாயின் பிரச்சனைகளே இல்லை...'

'அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா?"

"தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை....

அன்ராடம் பிரச்சனைகளால் ஆடும் மனிதனைப் பிரச்சனைகளைத் தீர்த்துப் புதுபாதை காட்டுவதற்குச் சமயங்கள் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றன...

- ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு -

- கொடுமை செய்பவன் நரகத்திற்குச் செல்வான் -

- எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு -

இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளிலிருந்து தப்பியோட வைப்பதால், மனிதனை மனிதனாக வாழ்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடைமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால்.. அததகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை.. நமக்குப் புதுவிதமான , நடைமுறைக்குச் சாத்தியமான , பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற சமயம் தான் தேவையே தவிர, மூட நம்பிக்கைகளுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல் ஓட வைக்கின்ற சமயம் தேவையில்லை...' (பக்கங்கள் 327 & 328)

'ஆகா.. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது"

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு..." என்றபடியே அருகீலமர்ந்த சாமியாரையே ஆவலுடன் நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான்.. ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கின்ரது... போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது..."

மேலும் தொடர்ந்தார்:

"இயறகையின் முரணபாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புறவுலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவே, பிரச்சனைகளைச் சிக்கலாக்கியது.. அவனது அறிவு வளர, வளர முரண்பாடுகளை அவன் கையாணட விதம் , பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரணபாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளைஒ அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின..." (பக்கங்கள் 346 &347)


இவ்விதமாகச் செல்லும் நாவல் பின்வருமாறு முடிந்திருக்கும்:

'அதோ பாருங்கள்... உலகின் நானா பக்கங்களிலுமே அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திறகான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை.... வறட்டு வேதாந்ததினுள்ளும், அடிமைத்தளைகளுக்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தைப் புத்துயிர்ப்படையச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த இராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச்சாரல்களில், காடுகளில், ஊன் உறக்கமின்றி , இரவு பகல்களாக, ஏற்றத்தாழ்வுகளால, நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்சிருத்துவதற்காக அவர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாணடவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதறகாக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவ்தற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும், இன்பத்தினையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதறகான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருகின்றார்கள்.... இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் ஒருக்கிறதே.. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை. இவர்கள் இறந்து விடலாம். இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை. விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை. இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில்... இம் மண்ணில் வீசும் தென்றலும் புரட்சிப் பண் பாடி நிற்கும். துளிர்க்கும் புற்களும் போர்ப்பண்ணிசைத்து விடும். மலையருவிகள், குன்றுகள்... இங்கெல்லாம் இம்மண்ணின் குரல் கேட்கின்றதே.. உங்களுக்கு அவை புரிகின்றதா? ... ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதொ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப் படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்றுவரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ" ( பக்கங்கள்: 352, 353 & 354 )

இவ்விதமாக மேற்படி தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள 'வன்னி மண்', மற்றும் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேறபடி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' கேள்விக்குள்ளாகினால் , 'வன்னி மண்' நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

வன்னி மண்ணில் என் வாழ்வு....மேற்படி 'வன்னி மண்' என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு ('கிரி பத்' ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் 'ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே' என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது 'வன்னி மண்ணி'ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.

மேற்படி 'வன்னி மண்' நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:

"..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்... வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
- பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் -
- பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது...-
- அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் -
- போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது -
ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ..... போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?

... நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்... மிகவும் கொடியதுதான்... ." (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)

இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:

'எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்' நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:

" அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்." (மண்ணின் குரல்; பக்கம் 220)

மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.

இவை தவிர 'அமெரிக்கா' என்றொரு சிறுநாவலும் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் மேலும் சிறுகதைகளையும் உள்ளடக்கி, தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. இது பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றில் (சரிநிகர், புதியபாதை) விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. மேற்படி 'அமெரிக்கா' அமெரிக்காவிலுள்ள தடுப்புமுகாம்களில் வாடும் அகதிகள் பற்றியது. என் சொந்த அனுபவத்தின் விளைவான பதிவு. பின்னர் 'அமெரிக்கா II ' என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்.

இவ்விதமாக எனது நாவல்கள் எல்லாவற்றிலுமே சமகாலப் பிரச்சினைகளின் தாக்கங்கள் என் அனுபவங்களினடிப்படையில் மலிந்து கிடக்கும். அதே சமயம் மேற்படி நாவல்களிலெல்லாம் இருப்பு பற்றிய என் கேள்விகளும், இயற்கையின் மீதான் என் ஆழ்ந்த காதலும் இழையோடிக் கிடப்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படி நாவல்களைத் தவிர இணைய இதழ்களில் வெளியான பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த என் அனுபவத்தின் விளைவான உருவானவை. கவிதைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியிருக்கின்றேன். இருப்பு பற்றிய என் கேள்விகளைக் கருப்பொருளாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளேன். இதே போல் கட்டுரைகள் பலவும் பதிவுகள் இணைய இதழில் பத்தி எழுத்துகளும் (ஒரு சில புனைபெயர்களில்) சமகால சமூக, அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஆகச் சுருக்கமாகக் கூறின், என் படைப்புகள் எதுவாகவிருந்தாலும் (கதையோ, கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாகவிருந்தாலும்) அவற்றில் நிச்சயமாக என் மண்ணின், புலம்பெயர்ந்து வாழும் சூழலின் அனுபவப் பதிவுகள் நிச்சயமாக இழையோடியிருக்கும். அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடலின் விளைவான சிந்தனைகளும் அவற்றில் நிச்சயம் விரவியே கிடக்கும். [மேற்படி 'மண்ணின் குரல்' தொகுதியின் பிரதிகள் சில என்னிடமுள்ளன. வாங்க விரும்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். விலை, தபாற் செலவு மற்றும அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விடயங்களைத் தருகிறேன்.)


ngiri704@rogers.com

Monday, June 22, 2009

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்! - வ.ந. கிரிதரன் -

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.

இவ்விதமான நகரத்து மாந்தரின் அந்நகர் அவர்களது மனங்களில் ஏற்படுத்திவிடும் மனப்பிம்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆதாரப்பகுதிகளாக ஐந்து விடயங்களை பேராசிரியர் கெவின் லிஞ்ச் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் இனங்கண்டார். அவையாவன:

1. நகரின் மாந்தரின் நடமாட்டத்திற்கு உதவும் பல்வகைப் பாதைகள் (Pathways)
2. நகரின் பல்வேறு தனமையினைப் பிரதிபலிக்கும் பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districs)
3. நகரின் பல்வேறு பகுதிகளைப் பிரிக்கும் ஓரங்கள் (Edges)
4. நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் போன்ற நில அடையாளச் சின்னங்கள் (Lanadmarks)
5. நகரின் பல்வேறு செயற்பாடுகளின் மையப் புள்ளிகளாக விளங்கும் நகரின் பகுதிகள் ( Nodes)

நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய அவரது மனப்பிம்பங்களை முக்கிய ஆதாரப்பகுதிகளாக விளங்குபவை மேலுள்ள ஐந்து பகுதிகளுமே என்பதைப் பேராசிரியர் லிஞ்சின் மேற்படி 'நகரின் பிம்பம' என்னும் ஆய்வு புலப்படுத்தும். இனி இன்னும் சிறிது விரிவாக மேற்படி ஐந்து ஆதாரப் பகுதிகள் பற்றியும் பார்ப்போம்.

1. பாதைகள் (Pathways)
நகரொன்றில் அந்நகரத்து மாந்தரின் நடமாட்டத்துக்குதவும் வகையில் பல்வேறு பாதைகள் பிரதான கடுகதிப் பாதைகளிலிருந்து, புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் தொடக்கம் குச்சொழுங்கை வரையிலெனப் பல்வேறு பாதைகள் காணப்படும். மேற்படி பேராசிரியர் லிஞ்சின் ஆய்வின்படி பாதைகள் நகர மாந்தரின் நகர் பற்றிய் பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை வகிப்பதை அறிய முடிந்தது. பல்வேறு காரணங்களுக்காக நகரத்து மாந்தர் மற்றும் அந்நகருக்கு வருகை தரும் பயணிகள் ஆகியோர் மேற்படி பாதைகளினூடு பயணிப்பர். அவ்விதமான பயணங்களின்போது மேற்படி பாதைகளினூடு பயணிக்கும் அனுபவமானது மேற்படி பயணிகளுக்கு, நகர மாந்தருக்குப்ப் பல்வேறு வகையிலான ம்னப்பதிவுகளை,மனக்கிளர்ச்சிகளை உருவாக்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்தே அவர்களது அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன. ( யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது மாலை நேரங்களில் துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிக் கல்லுண்டாய் வெளியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியினூடு செல்வதை இச்சமயத்தில் எண்ணிப் பார்க்கின்றேன். ஓட்டு மடத்தில் தொடங்கி காரைநகர் நோக்கிச் செல்லும் பிரதான பாதையது. ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் குடியிருப்பான பொம்மை வெளி தாண்டினால் அடுத்து விரிவது காக்கைதீவுக் கடற்புறம். மீன் சந்தையுடன் கூடிய முக்கியமான் யாழ்நகரின் நெய்தல் நிலப்பகுதி அது. ஒரு புறம் ஆனைக்கோட்டை மறுபுறம் காக்கைதீவுக் கடற்பகுதி. இதனைத் தாண்டினால் விரிவது நவாலியின் புகழ்பெற்ற மண்மேடுகளுடன் கூடிய மருதநிலப் பகுதி. மேற்குபுறம் புல்வெளியுடன் கூடிய கடல்சிறிது உள்வாங்கிய காக்கைதீவுக் கடற்பிரதேசம். மருதமும் நெய்தலும் இணையும் அற்புதம். அதனைத் தாண்டினால் கல்லுண்டாய் வெளியும் , உப்பளமும். மேலும் நீளும்பாதை வடக்கு அராலி, தெற்கு அராலியெனப் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டையில் இணைந்து ஒன்று காரைநகர் நோக்கியும் அடுத்தது சித்தன்கேணி நோக்கியும் செல்லும். வ்டக்கு அராலி/ தெற்கு அராலியெனப் பாதை பிரிவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழுக்கியாறு அராலிக் கடலுடன் கலப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள சிறிய பாலமொன்றைக் காணலாம். மேறப்டி வழுக்கியாறு பற்றிய பிரபல ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியானின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த 'நடந்தாய் வாழி வழுக்கியாறு' என்னும் பயணக்கட்டுரைத் தொடர் வயிறு குலுங்க வைக்கும் நல்லதொரு பயணத் தொடராக அப்பருவத்தில் எனக்குப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. மேற்படி பாதையானது என் இளம் பிராயத்திருப்புடன் பின்னிப் பிணைந்துள்ள பாதைகளிலொன்று. என் பால்யகாலம் வன்னி மண்ணில் கழிந்ததென்றால் அதன்பின்னான என் பதின்ம பருவம் யாழ் மண்ணிலும் அதன் சுற்றாடலிலும் கழிந்திருந்தது. அவ்வயதில் மேற்படி கல்லுண்டாய் வெளியினூடு காரைநகர் நோக்கி நீண்டிருக்கும் பாதையானது என் மனதிலேற்படுத்திய பதிவுகள் , பிம்பங்கள் பற்பல. அந்தியில் அவ்வழியே பயணித்தலோரினிய அனுபவம். ஆண்டின் பல்வேறு பருவங்களுக்கேற்ப அப்பயணத்தின் அனுபவங்களும் பலவகையின. அதிகாலையில் துவிச்சக்கர வண்டிகளில் நகர் நோக்கிப் படையெடுக்கும் தொழிலாளர்கள் அந்திசாயும் நேரங்களில் தத்தமது கிராமங்களை நோக்கி மீள் படையெடுப்பர். அதி காலைகளில் வழுக்கியாறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ள பாலத்தினடியில் மீனவர்கள் இறால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சில பருவங்களில் காக்கைதீவுக்கும், கல்லுண்டாய் உப்பளத்திற்குமிடையிலான பாதையின் ஓரங்களில் மீனவர்கள் பிடித்த கடலட்டைகளை அவித்துக் காயப்போட்டிருப்பார்கள். அப்பிராந்தியமெங்கும் கடலட்டைகளின் அவியும் மணமும், உலரும் மணமும் நிறைந்திருக்கும். கடலட்டைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் அப்பகுதி கடற்றொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது. காலை நேரங்களில் காக்கைதீவுக் கடற்கரையில் அமைந்திருந்த மீன்சந்தை ஒரே ஆரவாரமாக விளங்கும். கடற்பறவைகளால் நிறைந்திருக்கும். அந்திக் கருக்கிருளில் கட்டுமரங்களில் க்டலில் மீன்பிடிப்பதற்காகப் பயணத்தைத் தொடங்கியிருப்பர் கடறொழிலாளர்கள். தொலைவில் சற்றுமுன்னர்தான் கடலுக்குள் மூழ்கியிருந்த கதிரவனால் சிவந்து சிவந்து கிடந்த வானம் மேலும் சிவந்திருக்கும். இவ்விதமாக அப்பாதையானது என்னிடத்திலேற்படுத்திய மனப்பதிவுகள், பிம்பங்கள் அழியாத கோலங்களாக இன்றுமென் சிந்தையின் ஆழத்திலுள்ளனவென்றால் பாதைகள் எவ்விதம் நகர மாந்தரின் மனப்பிம்பங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றனவென்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.)

2. பிரதேசங்கள் அல்லது பகுதிகள் (Districts)
நகரானது பலவேறு அம்சங்களுடன் கூடிய சுற்றுப்புறங்களையும் (Component neighbourhoods) அல்லது பிரதேசங்களையும் (Districts) உள்ளடக்கிக் காணப்படும். உதாரணமாக உள்நகர் (Downtown) , புறநகர் (uptown), அதன் மையப்பகுதி, வர்த்தக மையப் பகுதி, தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகள், பல்கலைக்கழகப் பிரதேசங்கள் மற்றும் 'டொராண்டோ' போன்ற பல்சமூக மக்கள் வாழும் நகர்களில் அவ்வினங்கள் அதிகமாக செறிந்து வாழும் அல்லது வர்த்தகம் செய்யும் பிரதேசங்கள் எனப் பல்வேறு தனித்த அமசங்களைப் பிரதிபலிக்கும் பிரதேசங்களை அல்லது சுற்றுப்புறங்களைக் காணமுடியும். சில சமயங்களில் மேற்படிப் பிரதேசங்கள் தமக்கேயுரிய தனித்த அடையாளங்களுடன் ('டொராண்டோ'வின் நிதிமையமான உள்நகர்ப் பகுதி) விளங்கும். இன்னும் சில சமயங்களிலோ தனித்த சிறப்பியல்புகளற்று சிறப்பியல்புகளின் கலவையாகவும் (மான்ஹட்டனின் நடுநகர்ப் பிரதேசம் போன்று (midtown) விளங்குவதுண்டு. இவையெல்லாம் நகர மாந்தரொருவரின் அந்நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றனவெனலாம்.

3. ஓரங்கள் (Edges)
ஓரங்களை நகரின் பிரதேசங்களைப் பிரிக்கும் எல்லைகளாகக் குறிப்பிடலாம். இவை பாதைகளைப் போல் முக்கியமானவையாக இல்லாதபோதும் நகர் மாந்தரொருவரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிப்பவை. பெரும் வாவியினை உள்ளடக்கிய 'டொராண்டோ' போன்ற மாநகர்களைப் பொறுத்தவரையில் குளக்கரையானது நகரையும் நீரையும் பிரிக்குமோரெல்லையாக ஓரமாக விளங்குகின்றது. இவ்விதமே கடுகதிப் பாதைகளையும், மக்கள் வசிப்பிடங்களையும் பாதுகாப்பு, மற்றும் வாகன ஒலித்தொல்லை போன்றவற்றிலிருந்து பிரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள நீண்ட சுவர்களையும் ஓரங்களிலொன்றாகக் குறிப்பிடலாம். (சீனாவின் நீண்ட சுவரினயும் இங்கு நினைவு கூரலாம்). முதலாவதில் ஓரமானது நீரையும் நிலத்தையும் பிரிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அநத ஓரமானது நிலத்திலிருந்து நீருக்கோ அல்லது நீரிலிருந்து நிலத்திற்கோ மாந்தரின் நடமாட்டத்தைத் தடுப்பதில்லை. ஆயினும் இரண்டாவது உதாரணத்தில் சுவரானது ஓரெல்லையாக விளங்கி மக்கள் அதனூடு ஊடறுத்துச் செல்வதைத் தடுக்கிறது. இன்னும் சில சமயங்களில் ஓரமொன்றினைக் கண்டறிவது கடினமானது. உதாரணமாக 'டொராண்டோ'வின் கிழக்கில் அமைந்திருக்கின்ற சீனந்கர்ப் பிரதேசமானது அதற்கணமையில் அமைந்துள்ள 'குட்டி இந்தியா' பிரதேசத்துடன் படிப்படியாக ஆடையொன்றின் இரு பகுதிகள் இணைவதைப் போல் இணைந்து கலந்து விடுவதைக் காணலாம்.

4. நில அடையாளச் சின்னங்கள் (Landmarks)
அடையாளச் சின்னங்களும் நகர் பற்றிய பிமபங்களை நகர மாந்தரிடையே உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகின்றன. இத்தகைய அடையாளச் சின்னங்கள் தனித்து, உயர்ந்து தொலைவிலிருந்தும் அந்நகரினைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியூயார்க்கின் 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம் அல்லது 9-11இல் அழிந்த இணைக் கோபுரங்களான 'உலக வர்த்தக மையக்' கட்டங்களைபோன்று வான் முட்டும் கட்டடங்களாகவோ அல்லது 'டொராண்டோ'வின் புகழ்பெற்ற 'சி.என்' கோபுரம் (C.N.Tower) போன்ற கோபுரங்களாகவோ இருக்கலாம். தஞ்சையின் புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில் , பாரிஸின் சாயும் கோபுரம் மற்றும் குதுப்மினார் போன்ற கட்டடங்களையும் இவ்விதம் குறிப்பிடலாம். அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய பூங்காவிலுள்ள கட்டடமாகவோ அல்லது நீரூற்றாகவோ அல்லது சிலையாகவோ கூட இருக்கலாம். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, புகழ்பெற்ற அரண்மனைகள், ஆலயங்கள், தாதுகோபங்கள போன்ற கட்டடங்களை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

5. மையப்புள்ளிகள் ( Nodes)
இவையும் மேற்படி அடையாள சின்னங்கலைப் போன்று விளங்கினாலும் இவ்விதமான மையப் புள்ளிகள் வேறுபடுவது மற்றும் முக்கியத்துவம் பெறுவது அப்புள்ளிகளில் நடைபெறக்கூடிய செயற்பாடுகளிலிருந்துதான். நகரில் காணப்படும் பிரதானமான சதுக்கங்கள், பாதைகள் சந்திக்கும் சந்திகள் போன்றவற்றை இதற்குதாரணங்களாகக் குறிப்பிடலாம். நியூயார்க்கின் 'டைம்ஸ்' சதுக்கம் , 'டொராண்டோவின்' புதிய நகர மணடபமும் அதனுடன் கூடிய 'நேதன் பிலிப்' சதுக்கமும், மற்றும் புதிதாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட 'டன்டாஸ்' சதுக்கமும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் காரணமாக நகரின் முக்கிய மையப்புள்ளிகளாக இருக்கும் அதே சமயம் முக்கியமான நில அடையாளச் சின்னங்களாகவும் விளங்குகின்றன. மேலும் 'டைம்ஸ்' சதுக்கம் அப்ப்குதியில் சிரப்பியல்பு காரணமாக அந்நகரின் முக்கியமான பிரதேசங்களீலொன்றாக (District) விளங்குவதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இவ்விதமாக மேற்படி ஐந்து ஆதாரப்பகுதிகளும் எவ்விதம் நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் நகரின் விம்பம் பற்றிய பேராசிரியர் கெவின் லிஞ்சின் நகர அமைப்பு பற்றிய கோட்பாடானது நகர அமைப்புத் துறையின் முக்கியமானதொரு கோட்பாடுகளிலொன்றாக விளங்குகின்றது. நகரின் புனரமைப்புத் திட்டங்களில், அல்லது நிர்மாணத்திட்டங்களில் மேற்படி கோட்பாடு மிகவும் பயன் மிகவும் முக்கியமானதே.

[இச்சமயத்தில் மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றிய நினைவுகள் மீளெழுகின்றன. அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்க்லைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது).

ngiri2704@rogers.com
20/06/2009: